அடிலெய்டு: ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய அணியை பயமுறுத்தும் நோக்கத்தில் செய்திகளை வெளியிட்டு வருவதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விளாசி இருக்கிறார். 2008இல் பெர்த் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இதே போன்ற வேலையில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் ஈடுபட்டன. ஆனால். அப்போது இந்திய அணி அந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது என சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால், பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மாபெரும் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அதனால், தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் தொடரில் மிகவும் பின்தங்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய அணியை அச்சுறுத்தம் வகையில் தொடர்ந்து அடுத்த போட்டி நடைபெற உள்ள அடிலெய்டு மைதானத்தில் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும், அதிக பவுன்ஸ் இருக்கும் என பயமுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாக விளாசி இருக்கிறார் கவாஸ்கர்.
இது பற்றி சுனில் கவாஸ்கர் ஒரு பத்திரிக்கையில் பதிவு ஒன்றை எழுதி உள்ளார். அதில், "இந்திய பேட்ஸ்மேன்களை பயமுறுத்தும் வகையில் பிட்ச் எப்படி இருக்கும், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக, அதிக பவுன்சுடன் இருக்கும் என தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன ஆஸ்திரேலிய ஊடகங்கள். இதை ஆஸ்திரேலிய வீரர்கள் செய்யவில்லை. ஆனால், அந்த அணியின் உதவியாளர்கள் செய்கிறார்கள் (பேட்டிகள் அளிப்பதன் மூலம்)." என்று குறிப்பிட்டு உள்ளார்.
"அச்சு மற்றும் நவீன ஊடகங்களில் இந்த வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்கள். இந்திய அணியை பயமுறுத்த நினைக்கிறார்கள். இது 2007 - 08 தொடரில் நடந்ததை போன்ற ஒரு விஷயம் தான். அப்போது ஹர்பஜன் சிங் மற்றும் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் இடையே சிட்னி டெஸ்ட் போட்டியில் சர்ச்சை எழுந்தது."
"அதற்கு அடுத்த போட்டியில் ஆஸ்திரேலிய தேர்வு குழுவினர் ஷான் டைட்டை அணியில் சேர்த்தனர். அப்போது அடுத்து நடக்க இருந்த பெர்த் போட்டியில் ஷான் டைட் இந்தியாவை ஊதி தள்ளி விடுவார் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதின. ஆனால், அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது." என கவாஸ்கர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.