
டெஸ்ட் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27 அன்று துவங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல் - இரவு போட்டியாக டிசம்பர் 17 அன்று துவங்க உள்ளது.

சிக்கல்
இந்த முதல் டெஸ்ட்டுக்கு தான் சிக்கல் எழுந்துள்ளது., இந்திய அணி ஆஸ்திரேலிய சென்ற சில தினங்களில் அடிலெய்டு நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. முதலில் ஒற்றை இலக்கத்தில் இருந்த எண்ணிக்கை கிளஸ்டராக பரவி தற்போது இரட்டை இலக்கத்தை எட்டி உள்ளது.

கடும் லாக்டவுன்
இந்த நிலையில், அடிலெய்டு நகரம் இடம் பெற்றுள்ள தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் கடும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து பிற இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாய குவாரன்டைன் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளும் வகுக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறுமா?
இந்த நிலையில், அடிலெய்டு டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. உயர் மருத்துவ அதிகாரி நிகோலா ஸ்பர்ரியர்-இடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அதிரடியாக பதில் அளித்து டெஸ்ட் போட்டி குறித்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறார்.

கிறிஸ்டல் பந்து
"என்னால் கிரிக்கெட் போட்டி நடக்குமா என சரியாக சொல்ல முடியாது. என்னிடம் கிறிஸ்டல் பந்து எல்லாம் கிடையாது" என்றார் அவர். கிறிஸ்டல் பந்து என்பது நம் ஊரில் வெத்தலையில் மை போட்டு நடப்பதை பார்ப்பது போன்ற, மேற்கத்திய பாணி.

கேள்விக் குறி
நிகோலா கூறிய பதிலால் முதல் டெஸ்ட் நடப்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எனினும், அவர் தற்போது போடப்பட்டுள்ள லாக்டவுன் போன்ற கடும் நடைமுறைகள் விரைவில் அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதற்காகவே என்றார்.

தளர்வுகள்
அதன் மூலம், விரைவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தால், லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் அடிலெய்டில் திட்டமிட்டபடி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும். ஒரு வேளை அடிலெய்டில் போட்டி நடைபெற முடியாமல் போனால் வேறு மைதானத்துக்கு மாற்றப்படும்.

இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள் தற்போது தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஒரு ஹோட்டலில் குவாரன்டைன் செய்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கேயே பயிற்சி செய்து வருகின்றனர். அடிலெய்டில் போட்டி நடந்தால் அவர்கள் பாதுகாப்புக்கும் ஆஸ்திரேலியா முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications