அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகல் - இரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அதனால், இந்திய அணிக்கு ஒரு வகையில் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக ஐந்தாம் நாள் அன்று அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த போட்டியை நான்கு நாட்களுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. முதல் நாள் அன்று போட்டி துவங்க உள்ள மாலை நேரத்தில் தான் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.

40 சதவீதம் மழை என்பது சில சமயம் பெரிய அளவில் இல்லாமலும் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் எனவும், வானம் 98 சதவீதம் மேகமூட்டமாக இருக்கும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. எனவே, முதல் நாள் ஆட்டம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது நாள் அன்று 14 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மூன்றாவது நாள் அன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை. நான்காவது நாள் அன்றும் பெரிய அளவில் மழை வாய்ப்பு இல்லை. ஆனால், அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் அன்று 74 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
எனவே, ஐந்தாம் நாள் வரை இந்த போட்டியை எடுத்துச் சென்றால் அது வெற்றி வாய்ப்பை பறிக்க வாய்ப்பு உள்ளது. போட்டி டிராவில் முடிவடையக் கூடும். எனவே, இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டால் நிச்சயமாக நான்கு நாட்களுக்குள் போட்டியை முடிக்கவும் திட்டமிட வேண்டும். இது ஒரு வகையில் இந்திய அணிக்கு நெருக்கடியாகவே அமையும்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி இதே அடிலெய்டு மைதானத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆடி தோல்வி அடைந்து இருந்தது என்பதாலேயே மனதளவில் இந்தப் போட்டி நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருப்பதால் அந்த அணிக்கும் இரண்டாவது போட்டியில் மழையால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.