பிரிஸ்பேன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழையால் முடிவுக்கு வந்துள்ளது. முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் இனி வரும் அடுத்த 4 நாட்களில் 98 ஓவர்கள் வீசப்படும் என்றும், 30 நிமிடங்களுக்கு முன்பாக ஆட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காபா மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டது. அஸ்வின் மற்றும் ஹர்சித் ராணா நீக்கப்பட்டு, அவர்களது இடத்தில் ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டனர்.

இதன்பின் ஆஸ்திரேலியா அணி தரப்பில் உஸ்மான் கவாஜா - மெக்ஸ்வீனி இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் சிராஜ் அட்டாக்கை தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய 5வது ஓவரின் போதே மழை குறுக்கிட்டட்டது. அதன்பின் 20 நிமிடங்களுக்கு பின் மீண்டும் மழை நின்றதால், ஆட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் 13.2வது ஓவரின் போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
இம்முறை கனமழை பெய்ததால், இரு அணிகளின் வீரர்களும் உணவு இடைவேளையையும் எடுத்துக் கொண்டனர். அதன்பின் நீண்ட நேரமாக இரு அணிகளும் காத்திருந்த நிலையில், மழை நின்றபாடில்லை. ஒரு கட்டத்தில் கனமழை காரணமாக காபா மைதானத்தில் மழைநீர் தேங்க தொடங்கியது. இதனால் சோகமடைந்த ரசிகர்கள், மைதானத்தில் இருந்து வெளியேற தொடங்கினர்.
இறுதியாக முதல் நாள் ஆட்டம் மழைக் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ள நிலையில், அதனை ஈடு செய்யும் விதமாக அடுத்த 4 நாட்களுக்கு 98 ஓவர்கள் வீசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த 4 நாட்களும் இந்திய நேரப்படி காலை 5.50 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம், இனி காலை 5.20 மணிக்கு தொடங்கவுள்ளது.
கூடுதலாக அளிக்கப்பட்டுள்ள 30 நிமிடங்கள் ஒவ்வொரு நாளும் 98 ஓவர்கள் வரை வீசுவதற்கு உதவியாக அமையும். இருந்தாலும் அடுத்த 4 நாட்களின் வானிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.