பெங்களூர் : ஐந்தாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் சேஸிங்கில் முன்னிலையில் இருந்தது.
அப்போது தான் அதிக ரன் விட்டுக் கொடுத்ததால் தான் இந்த நிலை என எண்ணியதாகவும், ஆனால், அதை சரி செய்ய கடவுள் இன்னொரு வாய்ப்பு கொடுத்தார் என அர்ஷ்தீப் சிங் போட்டி முடிந்த உடன் கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்தாவது டி20 போட்டியில் இந்தியா கடைசி ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை சிறப்பாக வீசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 160 ரன்கள் எடுத்தது. போட்டி நடந்த பெங்களூர் மைதான பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது அந்த அணியின் பென் மெக்டேர்மாட் அதிரடி ஆட்டம் ஆடி இந்திய அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். அவர் விக்கெட்டை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், மூன்று ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து இருந்தார்.
எனினும் ஆஸ்திரேலியா விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்து தடுமாறியது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் கடைசி ஓவரை சந்தித்தார். ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்த அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார்.
அது குறித்து போட்டி முடிந்த உடன் பேசிய அர்ஷ்தீப் சிங், "நான் முதல் மூன்று ஓவர்களில் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்து விட்டேன். இந்தியா பின்னடைவில் இருக்க நான் தான் காரணம், இந்தியா தோற்றால் நான் தான் குற்றவாளி என நினைத்தேன். மற்றொரு வாய்ப்புக்காக காத்திருந்தேன். கடவுள் அந்த வாய்ப்பை அளித்தார். கடவுளுக்கு நன்றி. மேலும், என்னை நம்பிய அணிக்கும் என் நன்றி. சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவருக்கு முன் என்னிடம் என்ன நடக்கப் போகிறதோ அது தான் நடக்கும். எதையும் யோசிக்காமல் பந்து வீசுமாறு கூறினார்." என்றார்.