மும்பை : ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணி ஆடுகளத்தை மாற்றியதாக வெளிநாட்டு கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சிலர் ஆடுகளத்தை மாற்றி விட்டதாக புகைப்படத்தில் கமெண்ட் செய்வதை நான் பார்த்தேன். அதனை பார்க்கும்போது எல்லாம் எனக்கு சிரிப்புதான் வந்தது.

இந்தியா என்பது தனித்துவ நாடு. இங்கு பல பகுதிகளில் பல்வேறு மண் வகைகள் இருக்கிறது. அகமதாபாத்தில் மட்டுமே மூன்று நான்கு வகையான மண் வகைகள் உள்ளது. ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் எடுத்த முடிவு என்னை பிரமிக்க வைத்திருக்கிறது. அதிலும் பேட் கம்மின்ஸ் தன்னுடைய யுக்திகளை சிறப்பாகசெயல்முறைப்படுத்தினார். ஆஸ்திரேலியா விளையாடிய கடைசி நான்கு போட்டிகளில் அவர்கள் பயன்படுத்திய 50 சதவீத பந்துகளில் கட்டர் வகை பந்துகள் தான் அதிகம் இருந்தது.
மேலும் இறுதிப்போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எவ்வாறு பில்டிங் நிறுத்துவோமோ அதை போல் பேட் கம்மின்ஸ் நிறுத்தி இருந்தார். அவர் வீசிய பந்துகளில் ஸ்டம்பை நோக்கி மூன்று பந்துகள் தான் வீசி இருப்பார். டாஸ் வென்றதிலிருந்து போட்டி முடியும் வரை பாட் கம்மின்ஸ் செய்த ஒவ்வொரு விஷயமும் பாராட்டும் வகையில் இருந்தது. ஸ்ரேயாஸ் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை பெற்றிருக்கிறார்.
சிலருக்கு சில தனித்துவ விஷயம் இருக்கும் போது அதனை மக்கள் பாராட்டாமல் இதை செய்யாதீர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை ஸ்ரேயாஸ் பந்தை துரத்தி அடிக்கிறார். புல் ஷாட் நன்றாக விளையாடுவது குறித்து உழைத்து வருகிறார். வேகப்பந்துவீச்சு சுழற் பந்துவீச்சு ஆகியவற்றையும் ஸ்ரேயாஸ் நன்றாக எதிர்கொள்கிறார்.
அது நிச்சயம் ஒரு சாம்பியன் வீரருக்கான அறிகுறியாகும்.
முகமது ஷமியை பொறுத்தவரை பழைய காவியங்களில் மிடாஸ் டச் என்று சொல்வார்கள். மிடாஸ் என்பவர் தொட்டதெல்லாம் தங்கமாகும். அதேபோல் சமி இந்த உலகக்கோப்பை தொடரில் தொட்டதெல்லாம் தங்கமாகிவிட்டது. அவர் எங்கு பந்து வீசினாலும் அவருக்கு விக்கெட் கிடைத்தது. இந்தத் தொடரில் முதல் ஓவர்களே அவர் எத்தனை விக்கெட் எடுத்தார் என்று என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை என்று அஸ்வின் பாராட்டியுள்ளார்.