எப்படிப்பட்ட வெற்றி இது?
ஆஸ்திரேலிய அணி கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் பந்து சேத விவகாரத்தில் சிக்கியது. அதன் பின் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் உள்ளிட்ட வீரர்கள் தடை செய்யப்பட்டனர். ஆஸ்திரேலிய அணி ஊடகம் மற்றும் ரசிகர்களின் வெறுப்பால் துவண்டு போய் இருந்தது. அணியில் அனுபவம் குறைந்த வீரர்கள் பலரை வைத்துக் கொண்டு வெற்றி பெற தடுமாறி வந்தது. இந்த நிலையில், பந்து சேத விவகாரத்திற்குப் பின் நடந்த ஏழு டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியை ருசித்துள்ளது ஆஸ்திரேலியா. அதுவும் டெஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியை எதிர்த்து வென்றுள்ளது.
யாருக்கு முதல் வெற்றி?
ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அவருக்கு இதுவே முதல் டெஸ்ட் வெற்றி ஆகும். அதே போல பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கும் இதுவே முதல் டெஸ்ட் வெற்றி.
கோலி தான் முழு காரணம்
அனுபவ வீரர்கள், மனதளவில் நம்பிக்கை இல்லாமல் துவண்டு கிடந்த ஆஸ்திரேலிய அணிக்கு முக்கியமான டெஸ்ட் வெற்றியை அளித்து நிமிர்ந்து உட்கார வைத்தவர் ஒரு வகையில் இந்திய அணியின் கேப்டன் கோலி தான். எப்படி தெரியுமா?
இந்திய அணி திட்டமிடல் தவறு
பெர்த் டெஸ்டுக்கு இந்திய அணி ஆரம்பத்திலேயே ஒரு பெரிய தவறு செய்தது. பெர்த் ஆடுகளத்துக்கு நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே போதும். சுழற் பந்துவீச்சாளரே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தது. அதே சமயம், ஆஸ்திரேலியா எப்போதும் போல மூன்று வேகம் + ஒரு சுழல் கூட்டணியை வைத்து ஆடி வெற்றி பெற்றுள்ளது. அனுபவ வீரர் ஜடேஜாவை விடுத்து, ஹனுமா விஹாரியை தேர்வு செய்ததும் தவறான முடிவாகும். இந்த முடிவுகளை கோலி தான் எடுத்துள்ளார்.
உசுப்பேற்றி விட்ட கோலி
அது மட்டுமல்லாமல், கோலி இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்னை பேசிப் பேசியே உசுப்பேற்றி விட்டார். கோலியின் ஆக்ரோஷ மனப்பான்மை மற்ற வீரர்களையும் ஊக்குவிப்பதாக உள்ளது என டிம் பெய்ன் போட்டி முடிந்த உடன் கூறினார். இதில் இருந்தே கோலி தேவையில்லாமல் வம்பிழுத்ததால் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற வேகத்தை பெற்றுள்ளனர் என உணர முடியும்.
ஆஸ்திரேலியா வெற்றியை தக்க வைக்குமா?
இப்படி கோலி செய்த தவறுகளால் தோல்விகளில் இருந்து மீண்டுள்ள ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்த எழுச்சியை தக்க வைக்குமா? அல்லது மீண்டும் தோல்வி அடைந்து துவண்டு போகுமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.