பெங்களூரு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் தீபக் சஹர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி பெங்களூரு மைதானத்தில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளதால், இன்றைய ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக சிறிது நேரம் மிதமான சாரல் மழை பெய்தது. இருப்பினும் சரியான நேரத்தில் ஆட்டம் தொடங்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். பெங்களூரு மைதானத்தில் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 6 போட்டிகள் சேஸிங் செய்த அணிகளே வென்றுள்ளது. அதேபோல் பெங்களூரு மைதானத்தின் பவுண்டரி அளவு சிறியது என்பதால், அதிக பவுண்டரிகள் விளாசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மேத்யூ வேட் பேசுகையில், நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய விரும்புகிறோம். இந்த விக்கெட்டில் பந்து கொஞ்சம் நின்று வரும் என்று கருதுகிறேன். இந்த போட்டி தேர்வு குழு மற்றும் இளம் வீரர்களுக்கானது என்று நினைக்கிறேன். நிச்சயம் இளம் வீரர்கள் அணியில் தங்களின் இடத்திற்கான போட்டியாக இருக்கும். கிறிஸ் க்ரீனுக்கு பதில் எல்லீஸ் வந்துள்ளதாக என்று தெரிவித்தார்.
பின்னர் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நாங்களும் பந்துவீசவே விரும்பினோம். எங்கள் அணியினரிடம் அணுகுமுறையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளேன். பேட்டிங்கில் நம்பிக்கையுடன் விளையாடி சிறந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தீபக் சஹருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். சில அவசர விஷயம் காரணமாக தீபக் சஹர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.
இந்திய அணி விவரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, அகசர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான்.