பெங்களூர் : இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் கடைசி ஓவரின் போது அம்பயர் பவுண்டரியை தடுத்ததாக ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் நாதன் எல்லிஸ் நேராக பந்தை அடித்தார். பந்து பவுண்டரி செல்லும் அல்லது குறைந்தபட்சம் 2 ரன்களாவது எடுக்கலாம் என அவர் நினைத்த நிலையில், அம்பயர் மீது பந்து அடித்து அந்த வாய்ப்பு பறிபோனது.
அதே கடைசி ஓவரின் முதல் பந்து ஃபுல் டாஸாக மேத்யூ வேட் தலைக்கு வந்தது. ஆனால், அம்பயர் வைடு தர மறுத்தார். இப்படி கடைசி ஓவரில் இரண்டு சம்பவங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அமைந்ததால் அந்த அணியின் கேப்டன் மேத்யூ வேட் கோபமாக காணப்பட்டார்.

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 160 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆஸ்திரேலியா சேஸிங் செய்த போது 7 விக்கெட்கள் இழந்த நிலையில் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது கடைசி ஓவரை மேத்யூ வேட் சந்தித்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய ஃபுல் டாஸ் பந்து மேத்யூ வேட் தலைக்கு வந்தது. ஆனால், அப்போது வேட் சற்று குனிந்ததால் அது வைடா இல்லையா என்ற குழப்பத்தில் அம்பயர் வைடு தரவில்லை.
அப்போதே மேத்யூ வேட், அம்பயரிடம் சென்று வைடு தருமாறு முறையிட்டார். ஆனால் அம்பயர் கண்டுகொள்ளவில்லை. அதனால், அதிருப்தியில் இருந்த வேட் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் சென்ற பின் நாதன் எல்லிஸ் கடைசி 2 பந்தில் 10 ரன் தேவை என்ற நிலையில் அவர் அடித்த பந்து அம்பயர் மீது பட்டு கீழே விழுந்தது. அது பவுண்டரி சென்று இருக்கும் என உறுதியாக கூற முடியாது என்றாலும் 2 ரன்கள் எடுக்க வாய்ப்பு இருந்தது.
இப்படி ஒரே ஓவரில் இரண்டு வாய்ப்புகள் அம்பயரால் பறிபோனதை எண்ணி வெளியே இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் கோபத்தில் காணப்பட்டார். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் இதை பெரிய விஷயமாக மாற்றி விமர்சனம் செய்தனர்.