ராய்ப்பூர்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் அக்சர் படேலின் பவுலிங் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்ததோடு, டி20 தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 46 ரன்களை விளாசி அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலமாக கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டி20 தொடரிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் அசத்தியுள்ளார்.
வழக்கமாக சாம்பியன் அணிகளை எதிர்த்து இந்திய அணி விளையாடும் போது, சொல்ல முடியாத பதற்றம் இந்திய வீரர்களுக்கு இருக்கும். ஆனால் சூர்யகுமார் யாதவின் கேப்டன்சியில் இந்திய அணி எந்த பதற்றமும் இல்லாமல் ஆடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்கள் இல்லாமலேயே சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா போன்ற அணியையும் வீழ்த்த முடியும் என்று சூர்யகுமார் நிரூபித்துள்ளார்.
இந்த வெற்றிக்கு பின் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், இன்றைய ஆட்டத்தில் டாஸை தவிர்த்து மற்ற அனைத்து எங்களுக்கு சாதகமாக அமைந்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். வெற்றிக்காக போராட வேண்டும் என்று தீவிரத்தன்மையுடன் இந்திய இளம் வீரர்கள் விளையாடியது முக்கியமானதாகும். களமிறங்குவதற்கு முன்பாக, ஆலோசனை கூட்டத்தின் போது அனைவரும் பயமின்றி விளையாட வேண்டும் என்று கூறினோம்.
அதேபோல் அக்சர் படேலை எப்போதும் அழுத்தமான சூழல்களில் பயன்படுத்த விரும்புவேன். அவர் இன்று ஆடிய ஆட்டம் நிச்சயம் ஆச்சரியமான ஒன்றாகும். அதேபோல் டெத் ஓவர்களில் யார்க்கர் பந்துகளை வீசுவது மட்டுமே எங்களின் திட்டமாக இருந்தது. அதனை முயற்சித்து பார்த்தோம். எங்களுக்கு சாதகமாக அமைந்தது என்று தெரிவித்தார்.