பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ளா 7 டி20 போட்டிகளில் இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை சம்பிரதாய போட்டியே விளையாடப்பட வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றுள்ளதால், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக ஆஸ்திரேலியா அணி போராடும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியை பொறுத்தவரை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படாத சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் கடந்த 4 போட்டிகளிலும் ஒருமுறை கூட களமிறங்காத வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்தில் களமிறக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ளதால், நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக அமைந்துள்ள இந்த மைதானத்தில் குறைந்தது ஒரு அணியால் 10 சிக்சர்களாவது அடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியை பொறுத்தவரை முதல் பேட்டிங் செய்து இமாலய இலக்கை நிர்ணயித்தால் நிச்சயம் வெற்றிபெற முடியும். அதேபோல் இரண்டாம் பாதியில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால், சேஸிங்கிற்கும் சாதகமாக இருக்கும். இதனால் டாஸால் ஆட்டத்தில் பெரிய மாற்றம் இருக்காது என்றே பார்க்கப்படுகிறது.
இதுவரை பெங்களூரு மைதானத்தில் இந்திய அணி ஆடிய 7 டி20 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால், ரசிகர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றியுடன் முடிக்கும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பைக்கான அணியை இன்னும் வேகமாக கட்டமைக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.