2019 பிப்ரவரியில் ஆஸி. தொடர்
2019 பிப்ரவரியில் இந்த சிறிய தொடர் துவங்க உள்ளது. 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 24 தொடங்கி, மார்ச் 13 அன்று நிறைவு பெறுகிறது இந்த புதிய இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்.
டி20 தொடர் எப்போது?
இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24 (பெங்களூரு) மற்றும் பிப்ரவரி 27 (விசாகப்பட்டினம்) நடைபெற உள்ளது. டி20 போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடர் எப்போது?
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2 அன்று தொடங்குகிறது. மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13ஆம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
இந்தியா பிஸி
இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை முடித்து விட்டு அடுத்து நியூசிலாந்தில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அங்கிருந்து இந்தியா வந்து மீண்டும் ஆஸ்திரேலியா தொடரில் ஆட உள்ளது.
இன்னும் ஒண்ணு இருக்கு
இதற்கு பின் இந்தியா ஜிம்பாப்வே அணியுடன் ஒரு சிறிய தொடரில் பங்கேற்கும் எனவும் கூறப்படுகிறது. இதை வைத்துப் பார்த்தால் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியுடன் கடந்த ஜூன் மாதத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது முதல் ஓய்வின்றி கிரிக்கெட் ஆடி வருகிறது.
அதிகப்படியான தொடர்கள்
உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையிலேயே தற்போது இந்தியா இத்தனை தொடர்களில் பங்கேற்கிறது என கூறப்பட்டாலும், ஏப்ரல், மேவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரையும் கருத்தில் கொண்டால் இது அதிகப்படியானது தான்.
ஓய்வே இல்லையா?
நியூசிலாந்து தொடருக்கு பின் ஐபிஎல் தொடர் மட்டுமே, அதுவரை வீரர்கள் ஒரு மாத காலம் ஓய்வு எடுப்பார்கள் என நினைத்த நிலையில், அந்த இடைவெளியிலும் ஒரு தொடர் நடத்தவுள்ளது பிசிசிஐ. வீரர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டாலும் இந்த தொடர்கள் மனதளவில் சோர்வு அளிக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இந்தியா வந்து அந்த அணி ஆடவுள்ள இந்த தொடரே உலகக்கோப்பைக்கு முன்னர் அந்த அணி ஆடும் கடைசி சர்வதேச தொடர். அந்த அணியின் பல வீரர்கள் உலகக்கோப்பை காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.