ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து அக்சர் படேல் நீக்கப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பிசிசிஐ-க்கு பாடம் கற்பித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கு பின், இந்திய அணி வீரர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனனர். இந்த சுற்றுப்பயணத்தில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. அந்த டி20 அணியில் அக்சர் படேல் தேர்வு செய்யப்படவில்லை.

அவருக்கு பதிலாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டிருந்ததோடு, துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் அக்சர் படேலால் விளையாடாத முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவரது இடத்தில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் நேரடியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த டி20 தொடரில் 7வது வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் அக்சர் படேல் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் வேகப்பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டி கொண்டிருந்தார். தீபக் சஹர் வீசிய ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசி அபாயகரமாக இருந்தார்.
இதனால் பவர் பிளே ஓவர்களிலேயே அட்டாக்கில் வந்த அக்சர் படேல், டிராவிஸ் ஹெட்டை முதல் ஓவரிலேயே வீழ்த்தி அசத்தினார். அதன்பின் பென் மெக்டார்மட் மற்றும் ஹார்டி ஆகியோரையும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 4 ஓவர்களில் வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் அக்சர் படேல்.
அதுமட்டுமல்லாமல் அவர் வீசிய 4 ஓவர்களில் மொத்தமாக 13 டாட் பால்களை வீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட அடுத்த போட்டியிலேயே அக்சர் படேல் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றுள்ளார். இதனால் தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு தேர்வு செய்யாத பிசிசிஐ-க்கு அக்சர் படேல் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.