சென்னை : 2௦23 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், அதற்கான காரணம் போட்டி நடந்த அகமதாபாத் பிட்ச் தான் என பலரும் கூறி வருகின்றனர்.
தற்போது அந்த பிட்ச்சை தயார் செய்ய பிசிசிஐ போட்ட திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, சென்னை சேப்பாக்கம் பிட்ச் போல தயார் செய்ய வேண்டும் என பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் திட்டம் போட்டு அதில் சொதப்பி இருக்கும் விஷயமும் தெரிய வந்துள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் 3 விக்கெட்களை 2 ரன்கள் எடுத்த நிலையில் இழந்து தடுமாறியது. ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் முதல் சில ஓவர்களில் இந்திய அணியை நிலைகுலைய வைத்தனர். எனினும், அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் நடந்த சம்பவங்களை மனதில் வைத்து, பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் அகமதாபாத்தில் பிட்ச்சை தயார் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்காக, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோதிய போது ஆடிய அதே பிட்ச்சை இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்தனர். அந்த பிட்ச்சை அப்படியே சென்னை சேப்பாக்கம் பிட்ச் போலவே தயார் செய்ய வேண்டும் என மைதான ஊழியர்களுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், கடைசியில் அந்த பிட்ச் பகலில் பேட்டிங் செய்யவே ஒத்துவராத பிட்ச்சாக மாறி விட்டது. இந்தியாவும் டாஸில் தோற்று, முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆடியது. வெயில் அடித்த போது அந்த பிட்ச் மிக மந்தமாக இருந்ததால் இந்திய அணியால் ரன் குவிக்கவே முடியவில்லை. அதே சமயம் மாலை வேளையில் பிட்ச்சின் தன்மை சற்று மாறியதால் ஆஸ்திரேலிய அணிக்கு ஓரளவு ரன் குவிக்க எளிதாக இருந்தது.
இந்த காரணத்தால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 241 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இப்படியாக வெற்றிக்காக தவறான முறையில் பிட்ச்சை தயார் செய்து இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு ஆப்பு வைத்து இருக்கிறது பிசிசிஐ.