மெல்போர்ன் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், இந்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதால், அது இந்தியாவுக்கு கஷ்டமாக அமையலாம் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தைரியமான கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து பேசி உள்ள அவர், இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பான ஆட்டமாக அமையும் என நினைக்கின்றேன்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் தொடரை கைப்பற்றும் இடத்தில் இந்தியா இருக்கும். பெர்த், அடிலெய்ட் மற்றும் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து எந்த ஒரு வெளிநாட்டு அணியும் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இருந்தால் நிச்சயமாக அவர்கள் தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவே அர்த்தம்.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இரு அணிகளும் செல்கிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக நான் கருதுகிறேன். இரு அணிகளும் அபாரமாக விளையாடுகிறார்கள். ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய வீரர்களுக்கு எதிராக தடுமாறுகிறார்கள்.
ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறுவதை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் வீக்னஸை இந்தியா சிறப்பாக பயன்படுத்துகிறது. ஆஸ்திரேலிய அணியில் கோன்ஸ்டாஸ் என்ற வீரர் களமிறங்குகிறார். இது நிச்சயம் ஒரு புத்துணர்ச்சியை ஆஸ்திரேலியாவிற்கு வழங்கும். அவர் திறமை வாய்ந்த வீரராக இருக்கிறார். எனினும் டெஸ்ட் கிரிக்கெட் என்பது டெஸ்ட் கிரிக்கெட் தான். இங்கு கிரிக்கெட் டெக்னிக் சரியாக இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும். எனினும் அவர் ஆஸ்திரேலியாவில் எதிர்கால நட்சத்திரமாக விளங்குவார் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.