சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான பிட்ச்சில் அதிக புற்கள் இருப்பது பற்றி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
அங்கு இருந்த புற்களின் அளவை பார்க்கும் போது மாடுகள் அதை மேயும் அளவுக்கு இருந்தது என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், இதே போல இந்தியாவில் நடந்தால் ஆஸ்திரேலியா அதை பெரிதுபடுத்தும். ஆனால், நாங்கள் இதைப் பற்றி புகார் சொல்ல மாட்டோம் என்று கூறி இருக்கிறார்.

அதிக புற்கள் இருக்கும் பிட்ச்கள் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அங்கு பேட்டிங் செய்வது மிகவும் கடினம். இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் 11 விக்கெட்களும், இரண்டாவது நாள் ஆட்டத்தில் 15 விக்கெட்களும் வீழ்ந்தன. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களும் மட்டுமே எடுத்தன. அந்த அளவுக்கு பிட்ச் கடினமாக இருந்தது.
ஆனால், இந்த ஆஸ்திரேலிய பிட்ச் குறித்து முன்னாள் இந்திய வீரர்கள் இதுவரை விமர்சிக்கவில்லை. பொதுவாக ஆசிய கண்டங்களில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படும். அதை வெளிநாட்டு வீரர்களால் எளிதாக அணுக முடியாது என்பதால் அவர்கள் விரைவாக விக்கெட்களை இழப்பார்கள். அதனால், ஒரே நாளில் 15 விக்கெட் கூட விழும் வாய்ப்பு ஏற்படும்.
அது போன்ற சூழ்நிலைகளில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும், ஊடகங்களும் கடுமையான விமர்சனங்களை முன் வைப்பார்கள். அதே சமயம், இங்கிலாந்திலோ, ஆஸ்திரேலியாவிலோ அதேபோல ஒரே நாளில் அதிக விக்கெட்கள் வீழ்ந்தால் அது பற்றி அவர்கள் அமைதி காப்பார்கள்.
இந்த முரண்பாட்டை தான் சுனில் கவாஸ்கர் விமர்சித்து இருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் எப்போதும் இந்தியாவின் பிட்ச்-களையும், அங்குள்ள சூழ்நிலைகளையும் பற்றி பேசுகிறார்கள். ஆனால், நாங்கள் அதுபோல புலம்ப மாட்டோம். அதுபோல சப்பை கட்டுகளை கட்ட மாட்டோம். நாங்கள் எப்போதும் அது போன்ற பிட்ச்-களை பற்றி புகார் சொல்வதை நீங்கள் பார்க்க முடியாது."
"ஆனால், இந்தியாவில் ஒரே நாளில் 15 விக்கெட்கள் விழுந்தால் அது பெரிய நரகத்தை போல பேசப்படும். சிட்னியில் இதற்கு முன் இத்தனை புற்களை தான் பார்த்ததில்லை என கிளென் மெக்கிராத் கூறினார். ஆனால், அதுபோல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பிட்ச் பற்றி பேசியதை நீங்கள் கேட்டீர்களா? இந்தியர்கள் கிரிக்கெட் விளையாடச் சென்றால், அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆட முயல்வோம்."
"எங்கள் மீது பந்து தாக்கினால் நாங்கள் தாக்கப்பட்டோம் என்பதை ஏற்றுக் கொள்வோம். நேற்று இங்கிருந்த பிட்ச்சை பார்த்த போது மாடுகள் வந்து அதை மேய்ந்து விடும் என்று நினைத்தேன். இது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் அல்ல. ஏனெனில், டெஸ்ட் போட்டி என்பது நான்காவது அல்லது ஐந்தாவது நாளுக்கு செல்ல வேண்டும். இங்கு மழை பெய்யவில்லை என்றால் நான்காவது நாளை நாம் பார்க்க மாட்டோம் என்று நினைக்கிறேன்." என்றார் கவாஸ்கர்.