அணியில் நீக்கப்பட்ட தினேஷ் - தோனி
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் இடம் பெறவில்லை. அதே போல, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் தோனி இடம் பெறவில்லை. இவர்களது இடத்தை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் கொடுத்தது கிரிக்கெட் தேர்வுக் குழு.
பண்ட்டுக்கு கிடைத்த வாய்ப்பு
ரிஷப் பண்ட்டை அடுத்த விக்கெட் கீப்பராக வளர்க்கவும், உலகக்கோப்பை அணியில் இடம் பெறச் செய்யவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், கிடைத்த வாய்ப்புகளில் ரிஷப் பண்ட் பெரிதாக செயல்படவில்லை.
அடித்து ஆடி அவுட் ஆகும் பண்ட்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடிய பண்ட் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடித்து ஆட முற்படும் அவர் விரைவில் விக்கெட்டை பறி கொடுத்து விடுகிறார். இந்த நிலையில் அவரை உலகக்கோப்பையில் ஆட வைப்பது சரியான முடிவாக இருக்காது.
மீண்டும் டி20யில் தோனி ஏன்?
டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்த தோனி உலகக்கோப்பைக்கு முன் அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவருக்கு டி20 அணியில் இடம் அளிக்கப்பட்டு இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக அவர் 2020 டி20 உலகக்கோப்பையில் ஆட மாட்டார் என்பதால் இனி டி20 அணியில் இடம் பெற மாட்டார் என கூறப்பட்டது.
தோனி இடம் உறுதி
தோனி அனுபவ விக்கெட் கீப்பர் என்ற வகையில் உலகக்கோப்பை ஆடவுள்ளார் என்பது உறுதியாகி விட்டது. அதுவே அவரது கடைசி தொடராக இருக்கும். இந்த நிலையில், மாற்று விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இடத்திற்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இடையே இருந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் வெற்றி பெற்றுள்ளார்.
பொறுப்பாக ஆடும் தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டார். முக்கியமாக போட்டிகளில் சூழ்நிலை அறிந்து பேட்டிங் செய்வதில் பல அனுபவ வீரர்களைக் காட்டிலும் முன்னணியில் இருக்கிறார். பல வெற்றிகளில் இவரது பங்கும் இருந்தது. இந்த விஷயத்தில் ரிஷப் பண்ட் நேரெதிர். அவர் அணியின் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழந்து விடுகிறார்.
ரிஷப் பண்ட் வேண்டாம்
இதையெல்லாம் கணக்கிட்டு, ரிஷப் பண்ட்டை விட அனுபவ வீரர்கள் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் தான் உலகக்கோப்பைக்கு தேவை என இந்திய அணி நிர்வாகம் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.