25 ரன்கள் அடித்த கார்த்திக்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 299 ரன்களை சேஸ் செய்த இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் தோனியுடன் இணைந்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 14 பந்துகளில் 25 ரன்கள் அடித்த தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அணியின் வெற்றியை எளிதாக்கினார்,
அதிரடி ஆட்டம்
முன்பு இந்திய அணியின் ஃபினிஷர் என்ற அடையாளத்துடன் வலம் வந்த தோனி கடந்த சில போட்டிகளில் அதிரடியாக பேட்டிங் செய்ய முடியாமல் திணறி வந்தார். இந்த ஆஸி. ஒருநாள் தொடரில் இரண்டு அரைசதங்கள் அடித்தாலும், முதல் போட்டியில் 96 பந்துகளில் 51 ரன்களும், இரண்டாவது போட்டியில் அடித்த 55 ரன்களில் 43 ரன்களை ஒற்றை ரன்களாக ஓடியும் தான் எடுத்தார்.
தோனி வேண்டும்
தோனியின் பவுண்டரி அடிக்கும் வேகம் குறைந்து விட்டது என்பதே உண்மை. அதே சமயம், அவரது அனுபவம் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் இந்திய அணி உலகக்கோப்பை வெற்றியை நினைத்துப் பார்ப்பது சற்று கடினமே.
தினேஷ் கார்த்திக் சரியான ஆள்
இந்த நிலையில் அணியில் அடுத்த ஃபினிஷர் யார் என்ற கேள்விக்கு சரியான ஆளாக வந்து அமைந்துள்ளார் தினேஷ் கார்த்திக். கடந்த வருடம் நிதாஸ் ட்ராபி இறுதியில் கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் தினேஷ். அப்போதிருந்து சேஸிங் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் களத்தில் நின்றால் இந்திய அணிக்கு வெற்றி தான் என்ற நிலையை டி20 போட்டிகளில் உருவாக்கி உள்ளார்.
பொறுப்பாக ஆடும் வீரர்
அதே போல ஒருநாள் போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு இந்திய அணி வந்துள்ளது. தினேஷ் கார்த்திக் நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடி வருபவர். நல்ல அனுபவம் உள்ள வீரர். ஐபிஎல்-இல் கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அதே போல, களத்தில், சூழ்நிலை அறிந்து பொறுப்பாக ஆடும் வீரர் என்ற பெயரும் பெற்றுள்ளார்.
உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்
2019 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் தான் இந்திய அணியின் ஃபினிஷர் என்ற நிலையில், ஆறாவது இடத்தில் களமிறங்க உள்ளார் என ஓரளவு முடிவாகி உள்ளது. கோலி மற்றும் ரவி சாஸ்திரி தன்னை போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக இரண்டாவது போட்டி முடிந்த பின் தினேஷ் கார்த்திக்கே கூறினார்.
இடம் உறுதி
தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் இன்னும் ஓரீரு போட்டிகளில் கடைசி வரை நின்று வெற்றி பெற்று கொடுத்துவிட்டால் அவரது இடம் அணியில் உறுதி ஆகி விடும்.