பிரிஸ்பேன்: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை ஒருமுறை கூட ஆட்டநாயகன் விருதை வெல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதை பெறாமல் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் இடம்பிடித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் காயம் காரணமாக விளையாடவில்லை. பின்னர் 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அவர், 31 மற்றும் 28 என்று இரு இன்னிங்ஸ்களில் ரன்கள் சேர்த்தார்.

நல்ல தொடக்கம் கிடைத்தும் சுப்மன் கில் பெரிய ரன்களை குவிக்க தவறியது விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனென்றால் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில், நல்ல தொடக்கம் கிடைத்த பின் அடுத்தக்கட்டத்தை நோக்கி எப்படி நகர்வது என்று தெரியாமல் எளிதாக விக்கெட்டை கொடுத்து வெளியேறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ரோஹித் சர்மா போன்ற ஒருவருக்கு தொடக்கம் கிடைத்துவிட்டால், எவ்வளவு சிறந்த பந்தை வீசினாலும் அவுட் செய்வது சிரமம். ஆனால் சுப்மன் கில் 70 பந்துகளுக்கு மேல் விளையாடி நன்றாக செட்டிலாகி இருந்தாலும், பவுலர்கள் சாதாரணமாக வீசும் பந்துகளுக்கு விக்கெட்டை பறிகொடுத்துவிடுகிறார். இதனால் இன்னிங்ஸை எப்படி கட்டமைப்பது என்பதில் சுப்மன் கில் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.
இதனிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதை பெறாமல் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியல் வெளி வந்துள்ளது. அந்தப் பட்டியலில் சுப்மன் கில்லின் பெயர் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் அறிமுகம் செய்யப்பட்டார்.
அப்போது முதல் இந்திய அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில், இதுவரை ஒரு முறை கூட ஆட்டநாயகன் விருதை பெற்றதில்லை. இதனால் அந்த பட்டியலில் சுப்மன் கில்லின் பெயர் 4வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் 36 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை பெறாமல் விளையாடி முதலிடத்தில் இருக்கிறார்.
இதன்பின் இந்திய ஜாம்பவான் புஜாரா ஆட்டநாயகன் விருதை பெறாமல் 35 போட்டிகளில் விளையாடி 2வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் டாம் பிளெண்டல் தொடர்ந்து 34 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை பெறாததால் 3வது இடத்திலும் இருக்கிறார். இதனால் வரும் நாட்களில் சுப்மன் கில் இந்த மோசமான பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.