அம்ரோஹா : இந்திய அணி வீரர் முகமது ஷமியின் தாய் அஞ்சும் ஆரா உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்திய அணியில் முக்கிய முதன்மை வேகப் பந்துவீச்சாளராக இருந்தார் முகமது ஷமி. அரை இறுதிப் போட்டியில் கூட ஷமி 7 விக்கெட் வீழ்த்தியதே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் தன் மகன் ஆடுவதை நேரில் பார்க்க தயாரானார் அவரது தாய் அஞ்சும் ஆரா. போட்டிக்கு முந்தைய நாள் கூட ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஷமி குறித்து பேசிய அவர், இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல வாழ்த்துக்களை கூறி இருந்தார்.

அதன் பின் அவர் போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்துக்கு வர இருந்தார். அப்போது அவருக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டி வர இருந்த நிலையில் இரண்டு நாட்களாகவே பதற்றத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமாக இருப்பதாக ஷமியின் உறவினர் ஒருவர் கூறி இருக்கிறார்.
இறுதிப் போட்டியில் முகமது ஷமி 7 ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். எனினும், உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் மட்டுமே ஆடிய ஷமி 24 விக்கெட் எடுத்து அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
முகமது ஷமியின் சொந்த ஊரான உத்தரபிரதேசம் அம்ரோஹாவில் இறுதிப் போட்டியைப் பார்க்க பொது வெளியில் பெரிய திரை வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உத்தர பிரதேச அரசு, ஷமியின் சொந்த ஊரான அம்ரோஹாவில் சிறிய அளவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இருப்பதாக கூறி இருந்தது.