அகமதாபாத் : 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியில் இருக்கும் ஒரே பலவீனமான வீரருக்கு ஆஸ்திரேலியா குறி வைத்தால், இந்திய அணிக்கு அது பெரிய பாதிப்பாக மாறும்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோத உள்ளன. இந்திய அணி பலமான அணியாக காட்சி தரும் நிலையில், ஆஸ்திரேலியா எந்த வகையில் இந்திய அணியை எதிர்க்கும் என்ற விவாதம் முன்னாள் வீரர்கள் மத்தியில் நடந்து வருகிறது.
அதில் பலரும் குறிப்பிடும் இந்திய அணியின் பலவீனங்களில் ஒருவர் முகமது சிராஜ். அவர் இதுவரை உலகக்கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளை தவிர மற்ற போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரைத் தான் ஆஸ்திரேலியா முதல் சில ஓவர்களில் குறி வைத்து ரன் குவிக்க முயலும் என கூறப்படுகிறது.

அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முகமது சிராஜ் 9 ஓவர்களில் 78 ரன்கள் வாரிக் கொடுத்தார். அது போல இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக பந்துவீச்சு சராசரி வைத்துள்ள இந்திய பவுலரும் அவர்தான். அவரது பந்துவீச்சு சராசரி 32.61 ஆகும். மற்ற இந்திய பந்துவீச்சாளர்களின் சராசரி 25க்கும் குறைவாக உள்ளது.
இதன் மூலம் முகமது சிராஜ் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார் என்பதும், குறைவாகவே விக்கெட் வீழ்த்துகிறார் என்பது தெளிவாக தெரியும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் நிச்சயம் சிராஜ் பந்தை குறி வைத்து பவுண்டரி அடிக்க முயற்சி செய்வார்கள். அது இந்திய அணிக்கு பாதகமாக மாற வாய்ப்பு உள்ளது.
இதுவரை அந்த பாதிப்பை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டது பும்ரா மற்றும் முகமது ஷமி தான். சிராஜ் பந்து வீசும் முதல் நான்கு ஓவர்கள் மற்றும் கடைசி நான்கு ஓவர்களில் அவருடன் சேர்ந்து பந்து வீசுவது பும்ரா தான். பும்ரா ரன்களை குறைவாக கொடுப்பதால், சிராஜ் அதிக ரன்கள் கொடுப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதது போல தோன்றுகிறது. அதே போல, ஷமி அதிக விக்கெட் எடுப்பதால் சிராஜ், விக்கெட் வீழ்த்தாமல் இருப்பதும் பெரிதாக தெரியவில்லை.
ஆனால், உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆஸ்திரேலியா நிச்சயம் சிராஜை குறி வைத்து ஆட முயலும். இதை தவிர்க்க ஒரே வழி முகமது சிராஜ் தான் வீசும் முதல் நான்கு ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மட்டுமே. அப்படி விக்கெட் வீழ்த்தினால் நிச்சயம் அதன் பின் வரும் ஆஸ்திரேலிய வீரர்கள் அவர் பந்துவீச்சை கவனமாக ஆடுவார்கள். அதன் மூலம், அவர் அதிக ரன் விட்டுக் கொடுப்பதை தவிர்க்கலாம்.