அகமதாபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
ஆனால், ரோஹித் சர்மா ஆடிய அதிரடி ஆட்டம் போல வேறு எந்த இந்திய வீரராலும் ஆட முடியவில்லை. ரோஹித் ஆட்டமிழந்த பின் குறைந்தபட்சம் 100 ஸ்ட்ரைக் ரேட்டை கூட மற்ற வீரர்களால் தொட முடியவில்லை.
அதை வைத்து ஒப்பிட்ட விமர்சகர்கள், ரோஹித் சர்மா அவசரப்பட்டு ஆட்டமிழந்தார் என மற்றவர்கள் கூறினாலும், அவரது இன்னிங்க்ஸ் இல்லாவிட்டால் விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே இந்தியா நிதான ஆட்டம் ஆடி இருக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். போட்டி நடந்த பிட்ச்சில் எளிதாக பவுண்டரி அடிக்க முடியாது என கூறப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா அசாதாரணமாக பவுண்டரி அடித்துக் கொண்டு இருந்தார்.
கில் வெளியேறிய பின் உள்ளே வந்த விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினார். ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் கோலி - ராகுல் பவுண்டரி அடிக்க முடியாமல் திணறினர். அடுத்த 97 பந்துகளுக்கு அவர்களால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.
அதை வைத்துப் பார்க்கும் போது ரோஹித் சர்மா அடித்த நான்கு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் எத்தகைய முக்கியமானது என்பது புரியும் என விமர்சகர்கள் குறிப்பிட்டனர். அடுத்து விராட் கோலி 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 22 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ராகுல் நீண்ட நேரம் களத்தில் நின்று அரைசதம் கடந்தார். அவரும் கூட நிதான ஆட்டம் ஆட ரோஹித் சர்மா ஆடி விட்டு சென்ற அதிரடி ஆட்டம் தான் காரணம். ரோஹித் ஆட்டமிழந்த பின் இந்தியா சுமார் 29 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து இருந்தது. அதன் பின் சூர்யகுமார் யாதவ் வந்த பின்னரே இந்தியாவுக்கு பவுண்டரி கிடைக்கத் துவங்கியது.