அகமதாபாத் : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் செய்த தவறை, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் செய்யாமல் கவனமாக தவிர்த்து இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்திய அணி அஸ்வினை களமிறக்கும் என பலரும் கூறி வந்தனர்.

ஆனால், தெளிவாக அஸ்வினை களமிறக்காமல் அதே அணியுடன் களமிறங்கும் முடிவை எடுத்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. முகமது சிராஜை நீக்கிவிட்டு அஸ்வினை சேர்ப்பார் என்றெல்லாம் பலரும் கூறிய நிலையில், வெற்றிக் கூட்டணியை மாற்ற விரும்பவில்லை ரோஹித் சர்மா. அதுவே சரியான முடிவு என முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போட்டி நடக்க இருக்கும் அகமதாபாத் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதனால், ஜடேஜா, குல்தீப் யாதவ் உடன் அஸ்வின் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி செய்தால் சூர்யகுமார் யாதவ் அல்லது முகமது சிராஜை நீக்கி விட்டு அஸ்வினை சேர்க்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்தது. பலரும் வேகப் பந்துவீச்சாளர் சிராஜை நீக்கி விட்டு அஸ்வினை சேர்க்கலாம் என கூறினர்.
முன்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா, தொடர்ந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்று வந்த அஸ்வினை நீக்கிய போது இந்தியா தோல்வி அடைந்தது. அப்போது அஸ்வினை நீக்கியது பெரிய தவறாக கருதப்பட்டது.
ஆனால், இப்போது அஸ்வினை சேர்ப்பதற்காக அணியை மாற்றினால் பெரிய தவறாக இருக்கும் என்ற நிலையில், ரோஹித் சர்மா தெளிவாக சிராஜை நம்பி களமிறங்கி இருக்கிறார். சிராஜ் கடந்த சில போட்டிகளில் சரியாக பந்து வீசாத போதும் வெற்றிக் கூட்டணியை ரோஹித் சர்மா மாற்றவில்லை. அந்த வகையில் இது சரியான முடிவாக கருதப்பட்டது.