அகமதாபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் சுப்மன் கில் விரைவில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றம் அளித்தார். அதனால் அவரை வைத்து போட்ட திட்டம் ஒன்றை செயல்படுத்த முடியாமல் போனதால் கேப்டன் ரோஹித் சர்மா அவர் மீது கோபம் அடைந்தார்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் - ரோஹித் சர்மா துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
வழக்கம் போல ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினார். ஆனால், ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கில் துடிப்பாக இருந்தது. முதல் மூன்று ஓவர்களில் மட்டும் ஐந்து பவுண்டரிகளை தடுத்து மிரட்டியது. இந்த சூழ்நிலையிலும் ரோஹித் சர்மா பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை அளித்தார்.

இதுவரை நடந்த போட்டிகளைப் போல, ஒருபுறம் சுப்மன் கில் நிலைத்து நின்று ஆட, ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுப்மன் கில் 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷார்ட் பந்தை தன் வழக்கமான ஷாட் மூலம் பவுண்டரியாக மாற்ற முயற்சி செய்து இருந்தார் சுப்மன் கில். அந்த முயற்சியில் தோல்வி அடைந்து கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆகி இருந்தார் சுப்மன் கில்.
அப்போது எதிரில் இருந்த ரோஹித் சர்மா பெரும் ஏமாற்றம் அடைந்தார். அவர் முகத்தில் இதுவரை பார்த்திராத ஏமாற்றம் தெரிந்தது. அதற்கு காரணம், தான் போட்ட திட்டத்தை சுப்மன் கில் சொதப்பி விட்டார் என்பதே காரணம். அதே சமயம், விக்கெட்டை பறிகொடுத்த சுப்மன் கில் தன் மீதே கடும் கோபம் அடைந்தார். விக்கெட் பறிபோனதை அடுத்து கோபத்தில் கத்திய சுப்மன் கில், சோகத்துடன் வெளியேறினார்.
எனினும், சுப்மன் கில் வெளியேறிய பின் ரோஹித் சர்மா - விராட் கோலி அதிரடி ஆட்டம் ஆடி ஆஸ்திரேலியாவை மிரட்டினர். ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் நான்கு ஃபோர், மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார்.