மும்பை : இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆடிக் கொண்டு இருக்கும் போதே நேரலையில் இந்திய அணிக்கு சாபம் கொடுப்பது போல பேசி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் ஷாஹித் அப்ரிடி.
இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து பெற்ற வெற்றிகளின் காரணமாக அதிகப்படியான தன்னம்பிக்கையுடன் இருப்பதால், இந்திய அணிக்கு வீழ்ச்சி வரும் என அவர் இறுதிப் போட்டியின் போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி சுப்மன் கில் விக்கெட்டை 4 ரன்களில் இழந்தது. அடுத்து ரோஹித் சர்மா 47 ரன்கள் எடுத்தும், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அப்போது கிரிக்கெட் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமர்ந்து இருந்த ஷாஹித் அப்ரிடி, "நீங்கள் தொடர்ந்து எல்லா போட்டிகளையும் வென்றால், உங்களுக்கு அதிகப்படியான தன்னம்பிக்கை இருக்கும். அது உங்கள் வீழ்ச்சிக்கு துவக்கமாக இருக்கும்" எனக் கூறினார்.
அதாவது, இந்தியா உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளில் ஆடி ஒன்பதிலும் வெற்றி பெற்றது. அடுத்து அரை இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பத்து போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.
அப்படி இந்தியா தொடர் வெற்றிகள் பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் விக்கெட்டை இழந்து சறுக்கிய போது மனதில் இருந்த வன்மத்தை கக்கி இருக்கிறார் ஷாஹித் அப்ரிடி.
அத்துடன் அவர் நிறுத்தவில்லை. இந்திய ரசிகர்கள் மற்ற அணி வீரர்கள் சிறப்பாக ஆடும் போது கை தட்டி அவர்களை உற்சாசகப்படுத்துவதில்லை. இந்திய ரசிகர்கள் படித்தவர்கள் என கூறப்படும் நிலையில் அவர்கள் ட்ராவிஸ் ஹெட் சதம் அடித்த போது எழுந்து நின்று கைதட்டவில்லை என அப்ரிடி கூறி இருக்கிறார்.
இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய ரசிகர்கள் மனமுடைந்து இருந்த நிலையில், ட்ராவிஸ் சதம் அடித்த போது அவர்கள் கை தட்டவில்லை என அப்ரிடி கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.