மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த தோல்வியிலிருந்து மீள முடியாமல் இந்திய அணி ரசிகர்கள் தடுமாறி வருகின்றனர். இந்த நிலையில் அகமதாபாத்தில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் இறுதி ஆட்டத்தில் வெறும் நான்கு ரன்களில் வெளியேறியது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கில் நான்கு ரன்கள் ஆட்டம் இழந்தவுடன் இந்திய அணியின் பேட்டிங் தடுமாற்றத்தை கண்டது. ஏனென்றால் ஐபிஎல்லில் அகமதாபாத்தில் தான் கில் விளையாடுவார். கில்லின் கோட்டையாக அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் கருதப்பட்டது. இந்த தொடரில் டாப் 5 வீரர்களில் சதமே அடிக்காத வீரர் என்றால் அது கில் தான். எனவே கில் பைனலில் சதத்தை பூர்த்தி செய்வார் என்று ரசிகர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தோல்வி குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள கில், போட்டி முடிந்து 16 மணி நேரம் ஆகிறது. ஆனால் அந்த வலி நேற்று இரவில் இருந்து ஒரே மாதிரி தான் இருக்கிறது. கொஞ்சம் கூட குறையவில்லை. இந்த தொடருக்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். இருந்தும் அது வெற்றிக்கு போதவில்லை எங்களுடைய இலக்கை தொட நீண்ட தூரம் பயணத்து அருகில் வந்து விட்டு விட்டோம்.ஆனால் இந்த தொடரில் நாங்கள் கடும் உழைப்பை வெளிப்படுத்தினோம்.
நாங்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் சோகத்தில் இருந்தாலும் எங்களுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் ரசிகர்கள் தான் எங்களுக்கு உலகமே. இது நிச்சயமாக முடிவு அல்ல. நாங்கள் வெற்றி பெறும் வரை இந்தப் பயணம் ஓயாது. ஜெய்ஹிந்த் என்று கில் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கில்லின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கில் சோகமாக இருக்க வேண்டாம் என்றும் அடுத்து வரும் போட்டிகளில் இந்தியாவுக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.