இக்கட்டான நேரத்தில் ஷமியை நம்பினார் ரோஹித் ஆனால்.. உண்மையை உடைத்த வாசிம் அக்ரம்
மும்பை : இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, வழக்கமான விஷயத்தை மாற்றி இக்கட்டான நேரத்தில் ஷமியை பந்து வீச அழைத்தார்.
ஆனால், அந்த திட்டம் எடுபடவில்லை. மாறாக முகமது ஷமி அந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. இதற்கு இந்திய அணி பயந்ததே காரணம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் விளக்கிக் கூறி இருக்கிறார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டி நடந்த ஆடுகளத்தில் 270 - 280 ரன்கள் வரை எடுக்க வாய்ப்பு இருந்தும் இந்திய அணி விக்கெட்களை விரைவாக இழந்து 240 ரன்களுடன் ஆல் - அவுட் ஆனது.

குறைவாக ரன்கள் எடுத்ததால் பதற்றத்தில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா முதல் பத்து ஓவர்கள் பவுலிங்கில் பெரிய மாற்றத்தை செய்தார். வழக்கமாக இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் முதல் எட்டு அல்லது பத்து ஓவர்களை வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தான் வீசி வந்தார்கள்.
ஆனால், இறுதிப் போட்டியில் பும்ரா, முகமது ஷமி முதல் பத்து ஓவர்களை வீசினார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணம், ஷமி இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்துவார் என்பது. ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள் தான். ஷமி முதல் விக்கெட்டாக டேவிட் வார்னரை வீழ்த்திய போதும், நிறைய வைடுகள் வீசினார். ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை அவரால் வீழ்த்த முடியவில்லை.
மேலும், புதிய பந்தில் வீசிய ஷமிக்கு அவரது வழக்கமான பந்துவீச்சாக அது அமையவில்லை. அது மட்டுமின்றி, முகமது சிராஜ் தன் வழக்கத்துக்கு மாறாக பத்து ஓவர்களுக்கு பின் பந்து பழையதான நிலையில் பந்து வீச வந்தார். புதிய பந்தில் ஸ்விங் வீசிப் பழகிய அவருக்கு இந்த மாற்றம் சிக்கலாக இருந்தது.
இப்படி இந்திய அணி பயத்தால் செய்த குளறுபடியை பற்றி விரிவாக விளக்கினார் வாசிம் அக்ரம். "இந்தியஅணி பயந்து விட்டது. ஷமி நிறைய இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இருக்கிறார். ஆனால், ட்ராவிஸ் ஹெட் ஷமி ஓவர்களை தாக்குப் பிடித்து தப்பித்தார். ஷமி இரண்டு முறை வைடு வீசியதை நீங்கள் கவனித்து இருக்கலாம். சிராஜ் அவரது ஸ்விங் காரணமாக முதல் 2 -3 ஓவர்களை வீசி இருக்கலாம் என நான் கருதுகிறேன்." என்றார் வாசிம் அக்ரம்.
மேலும், "ஷமி மனரீதியாக முதல் ஸ்பெல் மாற்றும் போது தான் பந்து வீச வருவார். அதனால் அவருக்கு சற்று பழையதான பந்தை கட்டுப்படுத்தி வீசுவது எளிதாக இருக்கும். ஆனால், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவரிடம் புதிய பந்தை கொடுப்பது, வித்தியாசமான முடிவு என்ற வகையில் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், சிராஜ் 2 - 3 ஓவர்களை முதலில் வீசி இருக்க வேண்டும். அவரால் விக்கெட் வீழ்த்த முடியாத நிலையில், அடுத்து ஷமியை அழைத்து இருக்க வேண்டும்" என தன் வாதத்தை முன் வைத்தார் வாசிம் அக்ரம்.


Click it and Unblock the Notifications