மும்பை : ஆஸ்திரேலிய அணியை கடந்த ஓராண்டில் இந்திய அணி வீழ்த்திய போதெல்லாம் அணியில் ஒரு குறிப்பிட்ட வீரர் இருந்துள்ளார்.
அவர் இல்லாமல் ஆடிய இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை கோட்டை விட்டது. அடுத்து 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரிலும் அந்த இந்திய வீரர் இல்லாமல் ஆடி உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
அந்த வீரர் வேறு யாருமல்ல ரவிச்சந்திரன் அஸ்வின் தான். இதை வைத்தே அஸ்வினை கண்டாலே ஆஸ்திரேலிய அணி திணறுகிறது என்பதை தெளிவாக கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா, அஸ்வினை களமிறக்காமல் விட்டது தவறான முடிவாக மாறிவிட்டது.

2023ஆம் ஆண்டில் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. அதில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இடம் பெற்றார் அஸ்வின். டெஸ்ட் தொடரில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா பெற்றது இந்தியா.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் அஸ்வின் இடம் பெறாத நிலையில் ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளை பெற்று தொடரை இழந்தது இந்தியா. அடுத்து உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அஸ்வின் இரண்டு போட்டிகளில் இடம் பெற்றார். அந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றது. அவர் மூன்றாவது போட்டியில் இடம் பெறாத நிலையில், அந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
அடுத்து உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் மற்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் ஆடாத அஸ்வின், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே ஆடினார். அந்தப் போட்டியில் இந்தியா வென்றது. ஆனால், இறுதிப் போட்டியில் அணியை மாற்ற விரும்பாத கேப்டன் ரோஹித் சர்மா, அஸ்வினை அணியில் சேர்க்கவில்லை. இந்த நிலையில் தான் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
ஏன் ஆஸ்திரேலிய அணிக்கு அஸ்வினை கண்டால் பயம்? அதற்கு முக்கிய காரணம், ஆஸ்திரேலிய அணிக்கு வலது கை ஆஃப் ஸ்பின்னர்கள் என்றாலே சிக்கல் உள்ளது. அதிலும் இடது கை பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர், ட்ராவிஸ் ஹெட் போன்றோர் வலது கை ஆஃப் ஸ்பின்னரை சந்திக்க முடியாமல் திணறுவார்கள். இதுதான் காரணம்.
அஸ்வின் பந்துவீச்சில் கவனமாக ஆட வேண்டும் என அவர் ஓவர்களில் ரன் குவிக்காமல் மற்ற பந்துவீச்சாளர்களின் ஓவர்களை குறி வைத்து அடிக்க முயற்சி செய்து விக்கெட்டை பறி கொடுப்பார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். இந்த காரணத்துக்காக அஸ்வினை இறுதிப் போட்டியில் இந்திய அணி பயன்படுத்தி இருக்க வேண்டும்.