அகமதாபாத் : 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில் பிரபல வட இந்திய ஜோதிடர் பண்டிட் ஜகன்னாத குருஜி என்பவர் இந்தியாவுக்கு சிக்கல் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா இதுவரை ஒன்பது லீக் போட்டிகள் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு அடுத்து வலுவான அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு கடும் சவால் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த இரண்டு அணிகளில் எந்த அணி உலகக்கோப்பை வெல்லும் என்பது குறித்து பண்டிட் ஜகன்னாத குருஜி என்பவர் தன் ஜோதிட கணிப்பை கூறி இருக்கிறார். அவர் இரு அணிகளின் கேப்டன்கள் மற்றும் முக்கிய வீரர்களின் பிறந்த தேதிகளை வைத்து தன் ஜோதிட கணிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா தான் வெற்றி பெறும் என கணிப்புகள் கூறினாலும், இந்திய அணிக்கு ஒரு இடத்தில் சிக்கல் இருப்பதை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
அதன்படி, இரு அணிகளின் ஜாதக அடிப்படையில் இந்தியாவே முன்னிலையில் உள்ளது. அதனால், போட்டி நாளன்று இந்திய வீரர்களிடம் உற்சாகம், ஆற்றல், அர்ப்பணிப்பு ஆகியவை அதிகமாக காணப்படும். 2011 தோனிக்கு இருந்த அதே ஜாதக அமைப்பு தற்போது ரோஹித் சர்மாவின் ஜாதகத்திலும் உள்ளது. அதனால், ரோஹித் சர்மா வரலாறு படைப்பார். மேலும், இந்திய வீரர்களில் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், முகமது ஷமி, பும்ரா ஆகியோரது ஜாதக அமைப்புகள் சிறப்பாக உள்ளன எனக் கூறினார் அந்த ஜோதிடர்.
அடுத்து இந்தியாவுக்கு இருக்கும் சிக்கல் பற்றி கூறினார். எட்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் இந்திய வீரர்கள் தங்கள் பலத்தின் மீது மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். அதிக தன்னம்பிக்கை கொண்டு இருக்கக் கூடாது. அது கடும் சவால்களை ஏற்படுத்தி விடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அதாவது, இந்திய அணி தற்போது தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், அதை எண்ணி கவனக் குறைவாக இருக்கக் கூடாது என அவர் கூறி இருக்கிறார். ஆனால், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்-ஐ , ரோஹித் சர்மா ஜாதக ரீதியாக அனைத்து விதத்திலும் முந்துவதால் ரோஹித் சர்மாவின் கையே ஓங்கி இருக்கும் என அவர் கணித்துள்ளார்.
இதற்கு முன் சுமித் பஜாஜ் என்ற ஜோதிடர் அரை இறுதியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 250 - 270 ரன்கள் எடுக்கும். இந்தியா 47வது ஓவரில் சேஸிங் செய்து முடிக்கும் என கூறி இருந்தார். ஆனால், அந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 398 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், இறுதிப் போட்டி குறித்த மற்றொரு ஜோதிடரான இவரின் கணிப்பு சரியாக இருக்கிறதா என இறுதிப் போட்டி அன்று பார்க்கலாம்.