அகமதாபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்று பிரபல ஜோதிடர் சுமித் பஜாஜ் கணித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. கடந்த முறை போல் அல்லாமல் இம்முறை இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

6வது முறையாக உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா அணியும், 3வது முறையாக உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணியும் வரிந்து கட்டும் என்பதால், அகமதாபாத் மைதானமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. அதேபோல் அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் ஸ்லோவாக அமைக்கப்பட்டுள்ளதால், இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த பிட்சில் சேஸிங் செய்யும் அணிகளே 4 போட்டிகளில் வென்றுள்ளன. ஏனென்றால் இரண்டாம் பாதி ஆட்டத்தின் போது பனிப்பொழிவு அதிகளவில் இருக்கும். இதனால் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்புகள் ஒரு பக்கம் இருக்க, உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்று பிரபல ஜோதிடர் சுமித் பஜாஜ் கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அவரின் கணிப்புபடி, அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இறுதிப்போட்டி இந்திய அணிக்கு மிகப்பெரிய போராட்டமாக அமையும். ஆனால் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் எடுக்கப் போகும் முடிவுக்காக நிச்சயம் வருத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும். இதனால் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று கணித்துள்ளார்.
இவர் ஏற்கனவே வெளியிட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான கணிப்புகள் சரியாக அமைந்தன. இதனால் ரசிகர்கள் பலரும் இவரின் கணிப்புகள் என்னவென்று ட்விட்டரில் பின்பற்றி வருகின்றனர். அதேபோல் பிரபல விஞ்ஞான ஜோதிடர் லோபோ, 1987ஆம் ஆண்டு பிறந்த கேப்டனே உலகக்கோப்பையை வெல்வார் என்று கணிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.