அகமதாபாத்: உலகக்கோப்பை மீது ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்து போஸ் கொடுத்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இந்திய அணி தோல்வியடைந்தாலும், ஆஸ்திரேலியா அணியின் செயல்பாடுகளுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் திட்டமிடல், கேப்டன்சி, ஃபீல்டிங், பவுலிங், பேட்டிங் என்று அத்தனையிலும் இந்திய அணியை விட சிறப்பாக செயல்பட்டது. ஆஸ்திரேலியா அணியின் உலகக்கோப்பை வெற்றிகளிலேயே இந்த வெற்றி மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா ஜாம்பவான்களான பாண்டிங், கில்கிறிஸ்ட் உள்ளிட்டோரே கூறி வருகின்றனர்.
உலகக்கோப்பை வெற்றிக்கு பின் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் உற்சாகத்தில் மைதானத்திலேயே கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த கொண்டாட்டம் ஓய்வறையிலும் தொடர்ந்தது. இந்த நிலையில் உலகக்கோப்பையுடன் ஆஸ்திரேலியா வீரர்கள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ், உலகக்கோப்பை மீது கால் வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் உலகக்கோப்பை வென்ற ஆணவத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் எல்லை மீறிய கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக விமர்சனங்கள் வந்தன. அதேபோல் கால்பந்து விளையாட்டில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று ஒன்னொரு தரப்பில் விளக்கம் கொடுத்து வந்தனர்.
ஆனால் உலகக்கோப்பை மீது கால் வைத்து புகைப்படம் எடுத்து கொண்டதை போல் மிட்செல் மார்ஷ், ஆஸ்திரேலியா அணி வீரர்கள் யாரும் ஆஷஸ் கோப்பை மீது கால் வைத்து புகைப்படம் எடுத்து கொண்டதாக தெரியவில்லை. ஆஷஸ் வரலாற்றில் எந்த வீரரும் அப்படி செயல்பட்டதே கிடையாது. ஏனென்றால் ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆஷஸ் கோப்பை எப்படி உணர்வு ரீதியிலான ஒன்றோ, அப்படிதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகக்கோப்பை உணர்வுப்பூர்வ ஒன்றாக உள்ளது. இதன் காரணமாகவே மிட்செல் மார்ஷ் செயல்பாடுகள் மீது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவேசமாக விமர்சனங்களை முன் வைத்து வருவதாக பார்க்கப்படுகிறது.