அகமதாபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருப்பார் என கருதப்படுபவர் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல்.
ஆனால், மேக்ஸ்வெல்லுக்கு போட்டிக்கு முன்பே செக் வைத்துள்ளது இந்தியா. போட்டி நடக்க இருக்கும் அகமதாபாத் பிட்ச் குறித்து பல்வேறு ஊகங்கள் கிளம்பி வரும் நிலையில், அந்த பிட்ச் "ஸ்லோ பிட்ச்" என பலராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்லோ பிட்ச் என்றால் ரன் குவிக்க முடியாது என அர்த்தம் இல்லை. ஆனாலும், பந்தை கணித்து ஆடுவது சற்று கடினமாக இருக்கும். மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே இடத்தில் நின்று ஆடியது போல அதிரடி ஆட்டமெல்லாம் ஆட முடியாது.
ஆஸ்திரேலிய அணியில் ட்ராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் என நான்கு வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடி போட்டியை மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள். ஆனால், அதில் மற்ற விக்கெட்கள் சரிந்தாலும் மேக்ஸ்வெல் தனி ஆளாக போட்டியை எடுத்துச் செல்ல முடியும் என்பதை ஆப்கானிஸ்தான் போட்டியில் நிரூபித்தார்.
91 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்த நிலையில், இருந்த ஆஸ்திரேலிய அணியை மீட்டு தனி ஆளாக 201 ரன்கள் குவித்து வெற்றி தேடித் தந்தார் மேக்ஸ்வெல். ஆனால், அகமதாபாத் பிட்ச் ஸ்லோ பிட்ச் என்பதால் மேக்ஸ்வெல் முன்பு ஆடியது போன்ற அதிரடி ஆட்டம் ஆடுவது கடினமாகவே இருக்கும்.
என்னதான் பிட்ச் விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் தலையிடவில்லை என கூறினாலும், மறைமுகமாக சில விஷயங்களை பிசிசிஐ செய்வதாகவே கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்லோ பிட்ச் தயார் செய்யப்பட்டதும் பிசிசிஐயின் அறிவுறுத்தலால் இருக்கலாம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டத்துக்கு அந்த ஸ்லோ பிட்ச் செக் வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அப்படி ஸ்லோ பிட்ச் ஆஸ்திரேலிய அணியை பாதிக்கும் ஆக இருந்தால், அது இந்திய அணியையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இதில் எந்த சிக்கலும் வராது. இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலி, கே எல் ராகுல் போன்றோர் இதுபோன்ற ஸ்லோ பிட்ச்சில் பேட்டிங் செய்வதில் வல்லவர்கள். ரோஹித் சர்மா எப்படிப்பட்ட பிட்ச் ஆக இருந்தாலும் அதிரடி ஆட்டம் ஆடி குறைந்தது 40 ரன்களை சேர்த்து விடுவார் என்பதால் இந்திய அணிக்கு ரன் குவிப்பில் சிக்கல் இருக்காது.