அகமதாபாத்: உலகக்கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணி வீரர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டை முன்னாள் இந்திய வீரர் கீர்த்தி ஆசாத் விமர்சித்துள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் மைதானங்களிலேயே கண் கலங்கினர். இந்த போட்டியை நேரில் காண பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் மைதானம் வந்தார்.

அதேபோல் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தான் கோப்பையை வழங்கினார். ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸிடம் கோப்பையை வழங்கிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி கீழே இறங்கி சென்றார். இதனைத் தொடர்ந்து சோகமடைந்த இந்திய அணி வீரர்களை நேரடியாக ஓய்வறைக்கே சென்று சந்தித்தார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் கைகளை பிடித்தும், ஜடேஜாவுக்கு தோளில் தட்டியும், முகமது ஷமியை கட்டியணைத்தும் ஆறுதல் கூறினார். ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும், இந்தியா உங்களை நினைத்து பெருமை கொள்வதாக அவர்களுடன் சில வார்த்தைகளை கூறினார். இந்த வீடியோ நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை 1983 உலகக்கோப்பை வென்ற முன்னாள் இந்திய வீரரான கீர்த்தி ஆசாத் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து கீர்த்தி ஆசாத் பேசுகையில், இந்திய அணி வீரர்களை ஓய்வறையில் சென்று சந்திக்க யாருக்கும் அனுமதி கிடையாது. அது கிரிக்கெட் வீரர்களுக்கான அறையாகும். ஏற்கனவே உலகக்கோப்பை பைனலில் தோல்வியடைந்து இந்திய அணி வீரர்கள் சோகத்தில் இருந்தனர். இவ்வளவு ஏன், ஐசிசி கூட யாரையும் சந்திக்க அனுமதிக்காது.
ஒருவேளை வீரர்களை சந்திக்க விரும்பினால், வீரர்களின் ஓய்வறை விஐபி அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்திய அணி வீரர்கள் வெளியில் வரும் போது, அங்கு அவர்களை சந்தித்திருக்கலாம். அதேபோல் இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. தாராளமாக சந்திக்கலாம். ஆனால் வீரர்களை சந்திக்கும் போது கூட ஏன் கேமராவுடன் செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.