அகமதாபாத் : 2023 உலகக்கோப்பை தொடரில் முதன்முறையாக இந்தியா ஆல் - அவுட் ஆகி உள்ளது. அதுவும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆல் - அவுட் ஆகி இருப்பது இந்திய அணிக்கு சறுக்கலாக அமைந்தது. அதன் காரணமாகவே இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வியும் அடைந்தது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை ஆடிய ஒன்பது லீக் போட்டிகளில் ஒரு முறை கூட ஆல் - அவுட் ஆகவில்லை. அதிகபட்சம் 9 விக்கெட்களை மட்டுமே இந்தியா இழந்து இருந்தது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இதற்கு விராட் கோலியும் ஒரு முக்கிய காரணம்.

இந்த உலகக்கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் விக்கெட்கள் வீழ்ந்த போதும் விராட் கோலி நங்கூரம் போட்டு நின்று ஆடி வந்தார். அவரால் தான் இந்தியா இதுவரை ஆல் - அவுட் ஆகாமல் இருந்தது. ஆனால், இறுதிப் போட்டியில் நிலைமை வேறாக இருந்தது.
இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், சுப்மன் கில் 4, ரோஹித் சர்மா 47, ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி - கே எல் ராகுல் மிக நிதான ஆட்டம் ஆடினர். கோலி 54 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக இன்சைட் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார்.
அதன் பின் ராகுல் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்ததால் இந்தியா 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கோல் 29வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவர் இன்னும் சில ஓவர்கள் களத்தில் நின்று ஆடி இருந்தால் இந்தியா நிச்சயம் ஆல் - அவுட் ஆகி இருக்காது. அதே சமயம், மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா சொதப்பியதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் அனல் பறந்ததும் இந்திய அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியா 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.