அகமதாபாத் : ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பைக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல் நடந்து கொண்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக்கோப்பை வென்றது.
உண்மையிலேயே ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் திட்டமிட்டு ஆடி வெற்றி பெற்றது. பலரும் அந்த அணியை பாராட்டி வருகின்றனர். தோல்வி அடைந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூட ஆஸ்திரேலியா அபாரமாக பேட்டிங் ஆடியதை குறிப்பிட்டு பாராட்டினார்.

இந்த நிலையில் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பைக்கு உரிய மரியாதையை அளிக்காமல் நடந்து கொண்டது அவரது தலைக்கனத்தை காட்டுவதாகக் கூறி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
ஆஸ்திரேலிய உலகக்கோப்பை வென்ற உடன் கோப்பையை வாங்கிய அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், அதை தன் சக வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார். மைதானத்தில் ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரரும் கோப்பையை வாங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அடுத்து உலகக்கோப்பையை எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் உடை மாற்றும் அறைக்கு சென்றனர்.
அங்கே ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் மது அருந்திய நிலையில், உலகக்கோப்பை மீது தன் காலை வைத்து ஸ்டைலாக அமர்ந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது. அதைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இப்படி உலகக்கோப்பையை காலில் மிதிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்க வேண்டும் என ஒருவர் தன் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார். அதே போல பலரும் கடுமையாக மிட்செல் மார்ஷை வறுத்து எடுத்து வருகின்றனர்.
மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் உலகக்கோப்பை மீது காலை வைத்து இருக்கிறார் அவர். ஆஸ்திரேலிய அணியின் இந்த உலகக்கோப்பை வெற்றி அந்த அணிக்கு தலைக்கனத்தை கொடுத்துள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது.