அகமதாபாத் : 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காண முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.
ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன் குவிக்காத போதும் இந்திய அணியில் நீண்ட காலம் அவரை ஆட வைத்தவர் தோனி தான். பின் அவரை துவக்க வீரராக மாற்றியாதும் தோனி கேப்டன்சியில் தான் நடந்தது. அதன் பின் தான் ரோஹித் சர்மா தற்போது கேப்டன் பதவி வரை உயர்ந்து இருக்கிறார்.
ரோஹித் சர்மாவின் திறமையை சரியாக அடையாளம் கண்டு நீண்ட காலம் அவரை தோனி ஆதரித்த நிலையில், தோனியின் நிறைவேறாத ஆசையை ரோஹித் சர்மா நிறைவேற்றி வைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை என இரண்டு உலகக்கோப்பைகள் மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்று கொடுத்தவர் தோனி.
தோனி அதன் பின் உலகக்கோப்பை வெல்ல கடும் முயற்சி எடுத்தும் அவரால் 2015இல் கேப்டனாக கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்திய அணி 2015 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதியுடன் வெளியேறியது.
அடுத்து 2019இல் விராட் கோலி கேப்டன்சியில் ஆடிய தோனி, அப்போதாவது இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என கடும் முயற்சி எடுத்தும், அப்போதும் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறியது. அப்போது கண்ணீருடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார் தோனி.
ஆனாலும், அவருக்குள் மீண்டும் ஒரு முறை உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீராத ஆசை உள்ளது. அவரால் வெல்ல முடியாவிட்டாலும், அவரது கேப்டன்சியில் வாய்ப்பு பெற்று, இன்று உலகின் தவிர்க்க முடியாத வீரர்களாக மாறி இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்திய அணி தோனி முன்னிலையில் இறுதிப் போட்டியில் கோப்பை வென்று அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல் தோனி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களை வென்ற கேப்டன்களை அழைத்து கவுரவம் செய்ய உள்ளது பிசிசிஐ. அதற்காக தோனி இறுதிப் போட்டி அன்று போட்டி நடக்கும் மைதானத்துக்கு வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.