அகமதாபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான பிட்ச் கருப்பு நிற மண் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கருப்பு நிற மண் கொண்ட பிட்ச்கள் மெதுவான பிட்ச்களாக அறியப்படுகிறது. அந்த பிட்ச்களில் பவுன்ஸ் அதிகமாக இருக்காது. அதே போல, வேகப் பந்துவீச்சை விட ஸ்பின் பவுலிங்குக்கு சற்று அதிகம் ஒத்துழைக்கும்.
அதே போல, இது போன்ற பிட்ச்களில் 300 ரன்களை தாண்டி ரன் குவிப்பது கடினமே. தற்போது, இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி நடக்க உள்ள பிட்ச், இதற்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் போட்டி நடந்த அதே பிட்ச் தான் என கூறப்படுகிறது.

அப்போது பாகிஸ்தான் அணியை இந்தியா 191 ரன்களுக்கு சுருட்டி இருந்தது. அப்போது சுழற் பந்துவீச்சு தான் இந்திய அணிக்கு கை கொடுத்து இருந்தது. கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு சூழ்நிலை இறுதிப் போட்டியிலும் உருவாகலாம். ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி இருப்பதால் இந்திய அணியும் கவனமாக இருக்க வேண்டும். மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் கிளென் மேக்ஸ்வெல் இந்த தொடரில் மிக கட்டுக் கோப்பாக பந்து வீசி இருக்கிறார். இந்த இரண்டு பந்துவீச்சாளர்களிடம் இந்தியா எச்சரிக்கையாக ஆட வேண்டும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த பிட்ச் ஜடேஜாவின் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் சுழற் பந்துவீச்சுக்கு பெரிதாக ஒத்துழைக்காது. அதே சமயம், அவர் கட்டுக் கோப்பாக பந்து வீசுவார் என எதிர்பார்க்கலாம். குல்தீப் யாதவ் பந்துவீச்சுக்கு இந்த கருப்பு நிற பிட்ச் அதிகமாக ஒத்துழைக்கும். அவர் பொறுப்பாக பந்து வீசினால் ஆஸ்திரேலியா நிலை குலைந்து விடும் என நம்பலாம்.
பிட்ச் தவிர்த்து அகமதாபாத் மைதானத்தில் இன்னொரு சிக்கல் உள்ளது. அது மாலை நேரத்தில் அங்கே காற்றில் இருக்கும் ஈரப்பதம். அகமதாபாத்தில் மாலை நேரத்தில் சில நாட்களில் அதிக ஈரப்பதம் இருக்கும் என கூறப்படுகிறது. அப்படி இருந்தால் இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு முதல் 20 ஓவர்கள் மட்டுமே கையில் இருக்கும் வாய்ப்பு. அதை தவறவிட்டால் கடைசி 30 ஓவர்களில் ஈரப்பதம் காரணமாக பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. முதல் 20 ஓவர்களில் கூடுமானவரை விக்கெட்களை வீழ்த்தி விடுவதே வெற்றிக்கு வழி வகுக்கும்.