அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் ஸ்டாய்னிஸ் மற்றும் லபுஷேன் இடையில் யார் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பார்க்கலாம்.
"Mighty Australia" உலகக்கோப்பை தொடரில் இந்த வார்த்தை ஆஸ்திரேலியா அணிக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி ஆஸ்திரேலியா மட்டும் தான். ஐசிசி தொடர் என்று வந்துவிட்டால், கடைசி நிமிடம் கடைசி பந்து வரை ஆஸ்திரேலியா அணி வெற்றிக்காக போராடும் என்பது நிச்சயம். அதேபோல் மைண்ட் கேம்ஸ் ஆடுவதில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கில்லாடிகள்.

பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் காபா மைதானத்தில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கவே ஆஸ்திரேலியா களமிறங்கும் என்பது நிச்சயம். ஏனென்றால் ஆஷஸ் தொடரை வெல்ல முடிந்தாலும் கூட, சொந்த மண்ணில் சொந்த மக்கள் முன்னால் ஆஸ்திரேலியா அடைந்த அவமானத்தை துடைக்க அந்த அணிக்கு இது சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது.
அதன் எதிரொலி தான் எங்கள் ஆட்டத்தின் மூலமாக அகமதாபாத் மைதானத்திற்கு வரப்போகும் 1.3 லட்சம் இந்திய மக்களையும் அமைதியாக்குவேன் என்று பேட் கம்மின்ஸை சூளுரைக்க வைத்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றிகளை பெறவில்லை என்றாலும், தோல்வியடைய கூடாது என்று தீவிரமாக இருந்தது. அந்த பிடிவாதம் தான் ஆஸ்திரேலியா அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி பிளேயிங் லெவனில் ட்விஸ்ட் வைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் தடுமாறி வருகிறது. இதனால் எப்படியாவது அதிரடி வீரரான ஸ்டாய்னிஸை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று முயற்சிக்கும்.
அகமதாபாத் மைதானத்திற்கு ஏற்ப ஸ்டாய்னிஸ் அல்லது லபுஷேன் இருவரில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்ற சிக்கலில் பேட் கம்மின்ஸ் சிக்கியுள்ளார். ஏனென்றால் ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்களால் 5 முதல் 7 ஓவர்களில் ஒரு ஆட்டத்தை மாற்ற முடியும். அதேபோல் முன்னணி பவுலர்கள் தடுமாறினால், ஸ்டாய்னிஸை வைத்து அவர்களின் ஓவர்களை நிரப்ப முடியும். இதனால் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் எந்த பிளேயிங் லெவனுடன் களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.