அகமதாபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அஸ்வின் ஆடுவதில் சிக்கல் உள்ளது.
இறுதிப் போட்டி நடக்க உள்ள அகமதாபாத் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்படும் நிலையில் இந்திய அணி அஸ்வினையும் அணியில் சேர்த்து மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளிக்கும் என சில தகவல்கள் வெளியாகின.
ஆனால், அஸ்வினை அணியில் சேர்ப்பது நடக்காத காரியம் என்பதே உண்மை. ஏற்கனவே, அணியில் இருக்கும் எந்த வீரரையும் நீக்க முடியாத சிக்கல் இருப்பதால் கேப்டன் ரோஹித் சர்மா ஆசைப்பட்டாலும் கூட அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பது கடினம் தான்.

தற்போது இந்திய அணியில் முதல் ஐந்து இடங்களில் பேட்டிங் செய்யும் சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி., ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் ஆகியோரில் யாரையும் நீக்க முடியாது. ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்யும் சூர்யகுமார் யாதவை வேண்டுமானால் நீக்கிவிட்டு அஸ்வினை சேர்க்கலாம். ஆனால், அப்படி செய்தால் இந்திய அணி 5 விக்கெட் இழந்தால் அடுத்து பேட்டிங் செய்ய ஜடேஜா மற்றும் அஸ்வின் மட்டுமே களத்தில் இருப்பார்கள். அவர்களால் எந்த அளவுக்கு பேட்டிங் செய்ய முடியும் என்ற கேள்வி எழும்.
வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் அவரை நீக்கி விட்டு அஸ்வினை சேர்க்கலாம் எனவும் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், அப்படி செய்தால் இந்திய அணி இரண்டு முழு நேர வேக பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் வைத்துக் கொண்டு ஆட வேண்டும்.
ஒருவேளை ஆஸ்திரேலிய அணி சுழற் பந்துவீச்சை எளிதாக அணுகி ரன் குவித்தால் அப்போது வேகப் பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவார்கள். அதே போல, முதல் எட்டு ஓவர்கள் மற்றும் கடைசி எட்டு ஓவர்களுக்கு நிச்சயம் வேகப் பந்துவீச்சாளர்கள் தேவை. எனவே, இந்தியா இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் இறங்கினால் ஓவர்களை ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டு, அது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக முடியும். எனவே, இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது. அரை இறுதியில் இறங்கிய அதே 11 வீரர்கள் கொண்ட அணி இறுதிப் போட்டியிலும் களமிறங்கும்.
இந்திய அணி பிளேயிங் 11 : சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.