அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி பெரிய சொதப்பல் ஒன்றை செய்தார்.
அதுவும் ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடத் துவங்கிய முதல் பந்திலேயே விராட் கோலி முக்கிய வீரரின் கேட்சை கோட்டை விட்டார். அதனால், பெரிய பாதிப்பு ஏற்படும் என பலரும் எண்ணிய நிலையில், முகமது ஷமி விக்கெட் வீழ்த்தி கோலியை விமர்சனத்தில் இருந்து காப்பாற்றினார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து 241 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது ஆஸ்திரேலிய அணி. பும்ரா முதல் ஓவரின் முதல் பந்தை வீசினார். அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அந்த பந்தை அவுட்சைட் எட்ஜ் செய்தார். பந்து முதல் ஸ்லிப்பில் நின்று இருந்த விராட் கோலிக்கு அருகே வந்தது.
விராட் கோலி டைவ் அடித்து இருந்தால் அந்த பந்தை கேட்ச் பிடித்து இருக்கலாம். ஆனால், கோலி பந்தை பிடிக்க முயற்சி கூட செய்யவில்லை. அதே போல, இரண்டாவது ஸ்லிப்பில் நின்று இருந்த சுப்மன் கில்லும் கேட்ச் பிடிக்க முயற்சி செய்யவில்லை. அதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், அடுத்த ஓவரில் முகமது ஷமி பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் பந்தில் வார்னர் அதே போல எட்ஜ் செய்ய, இந்த முறை விராட் கோலி பந்தை சரியாக கேட்ச் பிடித்தார். இதை அடுத்து டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால், விராட் கோலி கேட்சை நழுவ விட்ட தவறு ஷமி பந்துவீச்சில் அவராலேயே ஈடுகட்டப்பட்டது.
இந்தியா 41 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்திய போதும் ஆஸ்திரேலிய வீரர்கள் லாபுஷேன், ட்ராவிஸ் ஹெட் நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடினர். ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர். ட்ராவிஸ் ஹெட் சதம் அடித்து இந்திய அணியை திணற வைத்தார்.