துவக்கம் சரியில்லை
முதல் இன்னிங்க்ஸில் ராகுல் 2, விஜய் 11 ரன்கள் எடுத்து வெளியேறினர். இரண்டாம் இன்னிங்க்ஸில் ராகுல் 44, விஜய் 18 ரன்கள் எடுத்தனர். ராகுல் பரவாயில்லை என சொல்லும் படி ஒரு இன்னிங்க்ஸில் 44 ரன்கள் எடுத்துவிட்டார். ஆனால், முரளி விஜய் நிலை சிக்கலாகி உள்ளது. மூன்றாம் போட்டியில் ப்ரித்வி ஷா அணியில் சேர அதிக வாய்ப்புள்ளது. அதற்குள், இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சதம், அரைசதம் என அடித்தால் மட்டுமே டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும்.
கோலிக்கு என்ன ஆச்சு?
கோலி அடித்த ரன்கள் 3 மற்றும் 34. சரி, எல்லா போட்டியிலும் ஒருவர் ரன் அடித்துக் கொண்டே இருக்க முடியாது. ஆனால், கோலி என்றால் நம் மனதில் தொடர்ந்து ரன் குவிப்பவர் என்ற எண்ணத்தை விதைத்து விட்டார். அதனால், இந்த ஒரு போட்டியில் கோலி சொற்ப ரன்களில் வெளியேறியது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. கேப்டன் எப்படியும் அடுத்த போட்டியில் ஒரு சதம் போடுவார் என எதிர்பார்ப்போம்.
ரஹானே தப்பினார்
முதல் இன்னிங்க்ஸில் 13 ரன்களில் வெளியேறி சொதப்பிய ரஹானே இரண்டாம் இன்னிங்க்ஸில் 70 ரன்கள் அடித்தார். இதை வைத்து இந்த தொடர் முழுவதும் பெரிய விமர்சனங்கள் இல்லாமல் இருக்கலாம் என பகல் கனவு காண முடியாது. ரஹானே மீண்டும் தன் துவக்க காலம் போன்று நீடித்து நின்று சதங்கள் அடிக்க வேண்டும்.
ரோஹித் சர்மாவுக்கு இனி இடம் உண்டா?
இந்தியா நான்கு பந்துவீச்சாளர்கள் கொண்டு களம் இறங்கிய நிலையில், ஹனுமா விஹாரிக்கே அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர் பகுதி நேர பந்துவீச்சாளராக இருந்திருப்பார். ஆனால், அந்த வாய்ப்பை பெற்ற ரோஹித் சர்மா பேட்டிங்கில் சொதப்பினார். முதல் இன்னிங்க்ஸில் 37 ரன்கள் அடித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் பேட்டிங் செய்து வந்த அவர், திடீரென சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். அடுத்த வாய்ப்பில் 1 ரன் மட்டுமே எடுத்தார். அடுத்த போட்டியில் ரோஹித்துக்கு இடம் கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ரிஷப் பண்ட் பேட்டிங் எப்படி?
ரிஷப் பண்ட் தன் பங்குக்கு முதல் இன்னிங்க்ஸில் 38 பந்துகளில் 25 ரன்கள், இரண்டாம் இன்னிங்க்ஸில் 16 பந்துகளில் 28 ரன்கள் அடித்து விட்டு நடையை கட்டினார். டெஸ்ட் போட்டியில் கொஞ்சம் நிதானமாக நின்று ஆடலாமே? என்ற கேள்விக்கு பண்ட்டிடம் பதில் இல்லை.
பின் வரிசை வீரர்கள் மோசம்
பின்வரிசையில் அஸ்வின் முதல் இன்னிங்க்ஸில் 25 ரன்கள் எடுத்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் அதுவும் இல்லை. இரண்டாம் இன்னிங்க்ஸில் கடைசி நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 4 ரன்கள் எடுப்பதற்குள் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இவர்கள் ஓரளவு நின்று ஆளுக்கு 10 ரன்கள் எடுத்தால் கூட அணிக்கு பெரும் உதவியாக இருக்கும். முதல் டெஸ்டில் நாம் வெறும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை வைத்துப் பார்த்தால் இது எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.
நம்பிக்கை அளிக்கும் புஜாரா
புஜாரா மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த போட்டியில் ஆடினார். ஒரு சதம், ஒரு அரைசதம் என கலக்கினார். ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேன் எப்படி ஆட வேண்டும் என இரு அணி வீரர்களுக்குமே பாடம் எடுத்து விட்டு சென்றார் புஜாரா. அடுத்து வரும் போட்டிகளிலும் புஜாரா தன் நிலையான ஆட்டத்தை தொடர வேண்டும்.