ரிஷப் பண்ட் இடைவிடாத பேச்சு
இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், கீப்பிங் செய்யும் போது இடைவிடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார். அதை வைத்து கல்லா கட்ட திட்டமிட்டுள்ளது ஆஸ்திரேலியாவில் இந்த டெஸ்ட் தொடரை நேரலை செய்து வரும் தொலைக்காட்சி.
ரிஷப் பண்ட் சீண்டல்
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் என்றாலே சீண்டல்கள் நிறையவே இருக்கும். முதல் டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பாட் கம்மின்ஸ் பேட்டிங் செய்த போது இடைவிடாமல் பேசி அவரை சீண்டிக் கொண்டே இருந்தார்.
கோலி - டிம் உரசல்
அது நேரலையில் ஒளிபரப்பாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானது. மறுபுறம் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்-ஐ வம்பிழுத்து வருவதும் தொடர்ந்து ரசிகர்களால் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.
பண்ட்டை வைத்து திட்டம்
ஆஸ்திரலியாவில் இந்த டெஸ்ட் தொடரை ஒளிபரப்பி வரும் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இதை வைத்து அடுத்து வரும் போட்டிகளை பரபரப்பாக்க திட்டமிட்டுள்ளது. முக்கியமாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யும் போது பேசுவது ஸ்டம்ப் மைக்கில் அப்படியே கேட்கிறது. அதனால், அவர் பேசினால் வர்ணனை செய்வதை நிறுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இதை செயல்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சொக்கத்தங்கம் ரிஷப் பண்ட்
இது பற்றி "ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆஸ்திரேலியா"வின் அதிகாரி ஸ்டீவ் கிராவ்லி கூறுகையில், "இந்த இந்திய விக்கெட் கீப்பர் வேடிக்கையானவர். இவர் திடீரென ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு மாறுகிறார். இவர் இயல்பான கதாபாத்திரம். என்னை சிரிக்கவும் வைக்கிறார். இவர் சொக்கத் தங்கம்" என ஒரேடியாக ரிஷப் பண்ட் புராணம் பாடினார்.
இஷாந்த் சர்மா - ஜடேஜா மோதல்
ஏற்கனவே, போட்டி இடைவேளையில் நேரலையில் யாரும் பார்க்காத போது நடந்த இஷாந்த் சர்மா - ஜடேஜா சண்டை வீடியோவை பக்காவாக எடிட் செய்து அடுத்த நாள் போட்டியின் இடையே பார்வையாளர்களுக்கு போட்டுக் காட்டியது இந்த தொலைக்காட்சி. நீங்க ரொம்ப நல்லா வருவீங்க!!