பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவுலர்களின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், ஹர்சித் ராணா அனுபவமே இல்லாமல் அசத்தலாக செயல்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு ஒவ்வொரு முறையும் எமனாக நின்று வந்த டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியதோடு, கடைசி நேரத்தில் நங்கீரம் போல் பேட்டிங் ஆடி வந்த மிட்சல் ஸ்டார்க்கை ஸ்லோயர் பந்து மூலமாக வீழ்த்தி ஹர்சித் ராணா கவனம் ஈர்த்துள்ளார். அறிமுகப் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டுள்ள ஹர்சித் ராணாவிடம், உமேஷ் யாதவின் சாயல்கள் தென்படுகிறது.

அவரை போலவே வேகம், பவுன்ஸ், யார்க்கர், ஸ்லோயர் பந்துகள் என்று வெரைட்டியை வைத்திருக்கிறார். இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து ஹர்சித் ராணா பேசுகையில், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எப்போதும் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்து வந்துள்ளார்.
எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்துள்ளார். அதேபோல் இந்தியா போன்ற எண்ணற்ற கிரிக்கெட் வீரர்கள் கொண்ட நாட்டில், நாட்டுக்காக விளையாடும் எனக்கு கிடைத்துள்ளது என்று நினைவுபடுத்தி கொண்டே இருந்தார். அதேபோல் இந்திய அணியுடன் தொடர்ந்து பயணித்தாலும், தொடர்ச்சியாக எந்த தொடரிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனாலும் கம்பீர் எனக்கு அனைத்து நேரங்களிலும் ஆதரவான வார்த்தைகளை பேசி இருக்கிறார். ஒவ்வொரு போட்டிக்கு முன்பும், பின்னரும் கவுதம் கம்பீர் என் தந்தையிடம் பேசுவார். எதைப்பற்றியும் நான் கவலைப்பட கூடாது என்பதற்காக அவ்வாறு செய்வார். இந்தப் போட்டியில் எனது செயல்பாடுகள் நிறைவாக இருக்கிறது. டிராவிஸ் ஹெட் விக்கெட்டை பற்றி பேசினால், அதற்கு முன்பாக ஏராளமான ஆலோசனைகள் நடைபெற்றது.
அவரை எப்படி செட் செய்து, வீழ்த்த வேண்டும் என்பதை திட்டமிட்டு செய்து முடித்துள்ளோம். சிறுவயது முதலே ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளை காண்பதற்காக தந்தையுடன் அதிகாலை எழுந்து டிவி முன்பு அமர்ந்து பார்ப்பேன். ஆனால் இப்போது நான் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுகிறேன். என்னை பொறுத்தவரை இது மிகப்பெரிய விஷயம் தான்.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறேன் என்பதை அறிந்த போது, மகிழ்ச்சியில் கண்ணீர் வந்துவிட்டது. முதல் போட்டி தொடங்குவதற்கு முந்தைய இரவு எனக்கு தூக்கமே இல்லை. ஆனாலும் எதுவும் மாறவில்லை. எப்போதும் போல் காலையில் எழுந்து எனது பயிற்சியை தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.