சிட்னி: இனி இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கேப்டன் ரோஹித் சர்மாவும் தோனியை பற்றி பேசவே கூடாது, அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை என தோனி ரசிகர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி கூறி வருகின்றனர்.
கவுதம் கம்பீருக்கு தோனி மீது சில அதிருப்திகள் உள்ளன. தோனியின் கேப்டன்சியில் தான் கவுதம் கம்பீருக்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டது. மறுபுறம் தோனியால் வாய்ப்பு பெற்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும், ஆல் ரவுண்டராகவும் இருந்த ரோஹித் சர்மா, துவக்க வீரராக மாறி மிகப்பெரிய கிரிக்கெட் வாழ்வை பெற்றார். அவர் தோனி பற்றி எப்போதும் உயர்வாக பேசுபவர்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் தோனி அளவுக்கான திட்டமிடலோ, வியூகம் அமைக்கும் திறனோ எதுவும் இல்லை என்பது சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது என தோனி ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
2008 ஆம் ஆண்டு தோனி கேப்டனான புதிதில் ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்றது. அப்போது தோனி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.
இந்திய அணி வெற்றி பெறுவதற்கு சில ஓவர்கள் இருந்த நிலையில் தோனி ஆடுகளத்தில் பேட்டிங் செய்த நிலையில், இந்திய அணியின் ஓய்வறைக்கு ஒரு செய்தியை அனுப்பினார். அதில் இந்த வெற்றியை நாம் கொண்டாட கூடாது. அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
அதன் பின்னணியில் மிகப்பெரிய திட்டம் ஒன்று இருந்தது. 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங் தலைமையில் விளையாடி வந்தது. உலகின் நம்பர் 1 அணியாகவும், எந்த அணியாலும் எளிதில் வீழ்த்த முடியாத அணி என்ற பெயரையும் பெற்று இருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளில் சில தோல்விகளை சந்திக்கும் போதெல்லாம் அது அதிர்ச்சி தோல்வியாகவே பார்க்கப்பட்டது.
அதாவது ஒரு நம்பர் 1 அணியை, கத்துக்குட்டி அணி வீழ்த்தி விட்டது. அது ஒரு அதிர்ஷ்டம் மட்டுமே என்பது போன்ற எண்ணத்தில் மட்டுமே ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்தனர். அடுத்த போட்டியிலேயே அவர்கள் மீண்டும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கி விடுவார்கள். மனதளவில் அவர்கள் எப்போதுமே ஆதிக்கம் செலுத்தும் அணி என்ற எண்ணத்திலேயே இருந்தனர்.
அது ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதை உடைக்க வேண்டும் என்பதற்காகவே தோனி வெற்றியை கொண்டாட வேண்டாம் என இந்திய அணிக்கு அறிவுறுத்தினார். அதன் மூலம் மறைமுகமாக இந்த வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது அல்ல. இனியும் நாங்கள் ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து வெல்வோம் என்ற மறைமுக செய்தியை உணர்த்த வேண்டும். அதற்காகவே இந்திய வீரர்களிடம் வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று கூறினார்.
அந்த திட்டம் வேலை செய்தது. அந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி கோப்பையை வென்றது. ஒரு போட்டியின் வெற்றியை கொண்டாட வேண்டாம் என தோனி கூறினார். ஆனால், இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆனை தவிர்த்தவுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மூத்த வீரர் கோலி அதை பெரிய வெற்றியை போல துள்ளி குதித்து ஆக்ரோஷமாக கொண்டாடினர்.
ஃபாலோ ஆனை தவிர்ப்பது ஒரு அணி போராடுகிறது என்றால் அது பலவீனமான அணி என்பதே அதன் பொருள். அப்படிப்பட்ட ஒரு பலவீனமான செயலை செய்து பின் வரிசை வீரர்களின் உதவியுடன் ஃபாலோ ஆனை தவிர்த்து விட்டு அதை வெற்றியைப் போல இந்திய அணி நிர்வாகம் கொண்டாடியது இந்திய அணியின் மோசமான நிலையை தான் காட்டுகிறது.
அது எந்த அளவுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்திருக்கும் என கவுதம் கம்பீரும், ரோஹித் சர்மாவும் சிந்திக்கவில்லை. அந்த இடத்தில் தான் அவர்கள் தோனியை விட திட்டமிடலில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். இதை சுட்டிக்காட்டி தான் ரசிகர்கள் இனி தோனியை பற்றி அவர்கள் பேசவும் கூடாது. அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை என விமர்சனம் செய்து வருகின்றனர்.