துபாய்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பின் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடுமையான பதிலை அளித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் படுமோசமான ஃபார்மில் இருந்தார். அதன் பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் அடித்த போதும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். இதுவரை 4 போட்டிகளில் 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 26 என்பதாக உள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர், "ரோஹித் தற்போது இருக்கும் ஃபார்ம் பற்றியும், அவர் இன்னும் எத்தனை காலம் கிரிக்கெட் விளையாடுவார் என்பது பற்றியும் கூறுங்கள்" என்று கம்பீரிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், "இப்போது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன்னால் என்ன சொல்ல முடியும்?"
"உங்களின் கேப்டன் அதிரடியாக விளையாடுவது நல்லது விஷயம் ஆகும். ஓய்வறைக்கு அது நல்ல சமிக்கையை அனுப்புகிறது. பயம் இல்லாமல் தைரியத்துடன் ஆட வேண்டும் என்பதை மற்ற வீரர்களுக்கு சொல்கிறது. நீங்கள் எவ்வளவு ரன்கள் அடிக்கிறார் என்பதை வைத்து அவரை மதிப்பிடுகிறீர்கள். நாங்கள் அவர் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதை வைத்து மதிப்பிடுகிறோம். அதுதான் வித்தியாசம்."
"நீங்கள் புள்ளி விவரங்களை வைத்து மதிப்பிடுகிறீர்கள். நாங்கள் அவர் போட்டியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை வைத்து மதிப்பிடுகிறோம். பத்திரிக்கையாளர்களும், விமர்சகர்களும் எண்களையும், சராசரியையும் மட்டும் தான் பார்க்கிறீர்கள். பயிற்சியாளராக, ஒரு அணியாக நாங்கள் எண்களையும், சராசரியையும் பார்ப்பதில்லை."
"கேப்டன் முதலாவதாக, முன்னே வந்து நின்று ஒரு விஷயத்தை செய்கிறார் என்றால், அதைவிட ஒரு அணிக்கு சிறந்த விஷயம் எதுவும் இருக்க முடியாது" என ரோஹித் சர்மாவுக்கு ஆதவராக பேசினார் கவுதம் கம்பீர். அந்த பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு, பத்திரிக்கையாளர்களை அவர் திருப்பி விமர்சனம் செய்தார்.
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இடையே விரிசல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு இந்த நிகழ்வு முடிவுரை எழுதி உள்ளது.