தீர்வு காண வேண்டும்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-1 என தற்போது சம நிலையில் உள்ளது. மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்திய அணியின் ஒரே குறையாக உள்ள மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இடத்திற்கு இந்தியா தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளார் கவாஸ்கர்.
இருவரும் சரியில்லை
முதல் ஒருநாள் போட்டியில் கலீல் அஹ்மது 8 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்தார். அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால், இரண்டாவது போட்டியில் புதிய வீரர் சிராஜ்-க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் 10 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
அழுத்தம் அதிகரிப்பு
இரண்டு வீரர்களுமே மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் என்ற இடத்தில் தங்களை நிரூபிக்கவில்லை. இவர்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பது முக்கிய பந்துவீச்சாளர்களான ஷமி மற்றும் புவனேஸ்வர் குமாருக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறது.
3 சுழற் பந்துவீச்சாளர்கள்
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என கவாஸ்கர் கூறினார். "இந்தியாவின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. பீல்டிங் நன்றாக இருக்கிறது. மெல்போர்ன் பெரிய மைதானம் (மூன்றாவது போட்டி நடைபெறும் மைதானம்). அங்கே இந்தியா 2 வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 சுழற் பந்துவீச்சாளர்கள் கொண்டு களமிறங்கலாம்" என கூறினார்.
சாஹலுக்கு வாய்ப்பு
தற்போது ஜடேஜா, குல்தீப் யாதவ் இருவரும் சுழற் பந்துவீச்சாளர்களாக இரண்டு போட்டிகளிலும் ஆடிய நிலையில், மூன்றாவது போட்டியில் மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் சாஹல் வாய்ப்பு பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டுக் கோப்பு முக்கியம்
இந்தியா மூன்றாவது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்பதால் சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும். எத்தனை வேகப் பந்துவீச்சாளர் இறங்கினாலும், மூன்றாவது போட்டியில் இந்திய வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினால் இந்தியா வெற்றி பெறுவது உறுதி.