மும்பை: சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறை சோதனை அடிப்படையில் புதிய விதியை கொண்டு வர ஐசிசி முடிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரசிகர்கள் பார்த்த உலகக்கோப்பை தொடராக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை கூடுதல் சுவாரஸ்யமாக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.

இதற்காக புதிய விதிகளை கொண்டு வர ஐசிசி முடிவு செய்துள்ளது. அதன்படி பவுலிங் செய்யும் அணிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவும், அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் நேரத்தை கட்டுப்படுத்தவும் புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஓவர் முடிந்த அடுத்த 60 வினாடிகளில், பவுலிங் அணி அடுத்த ஓவரை வீச தொடங்க வேண்டும்.
ஒரு வேளை ஒரு அணி இந்த கட்டுப்பாட்டை 3 முறை மீறினால், அந்த அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும். இந்த விதியை டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை சோதனை முறையில் அமல்படுத்த ஐசிசி செயற்குழு கூட்டத்தில்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்பந்து விளையாட்டை போல் கிரிக்கெட்டிலும் ஸ்டாப் கிளாக் நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த விதிகள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு சோதனை முயற்சியை ஐசிசி செய்யவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் கடைசி ஓவரை வீச தொடங்கவில்லை என்றால், அந்த ஓவருக்கு 30 யார்ட் வளையத்திற்குள் வெளியில் இருக்கும் ஒரு ஃபீல்டரை உள்ளே அழைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்தப்படவிருந்த நிலையில், தற்போது அதனை தென்னாப்பிரிக்காவில் நடத்த ஐசிசி செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி சஸ்பெண்ட் செய்ததே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.