அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட்-டுக்கு இடையே மோதல் எழுந்தது.
ட்ராவிஸ் ஹெட், முகமது சிராஜை திட்டியதை எடுத்து சிராஜ் திருப்பி அவரை திட்டினார். இருவரும் மோசமாக நடந்து கொண்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார். அவர் 141 பந்துகளில் 140 ரன்கள் எடுத்தார். முகமது சிராஜ் அவரை பவுல்டு அவுட் செய்தார். அதன் பின் சிராஜ் விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார். அதை பார்த்த ட்ராவிஸ் ஹெட் அவரைப் பார்த்து ஏதோ சில வார்த்தைகளை சொன்னார். அதை கேட்டு கோபம் அடைந்த முகமது சிராஜ் ட்ராவிஸ் ஹெட்டை பார்த்து பதிலுக்கு சில வார்த்தைகளை கூறினார்.
இதை அடுத்து இருவரும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். அந்த நாளின் முடிவில் டிராவிஸ் ஹெட் பத்திரிக்கையாளர் சந்திப்பில், தான் சிராஜை பார்த்து "நன்றாக பந்து வீசினாய்" என்று சொன்னதாகவும், அதற்கு சிராஜ் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறி இருந்தார். அதற்கு பதில் கூறிய முகமது சிராஜ் ட்ராவிஸ் ஹெட் பொய் கூறுவதாகவும், அவர் தன்னை திட்டியதால் தான் மீண்டும் பேசியதாகவும் கூறினார்.
இதை அடுத்து இந்த விவகாரம் சூடு பிடித்தது. இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது முகமது சிராஜ் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது டிராவிஸ் ஹெட் உடன் அவர், "என்ன நடந்தது?" என பேசினார். இருவரும் போட்டி முடிந்தவுடன் கட்டி அணைத்து சென்றனர். இதன் மூலம் இவர்களது பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாக ரசிகர்கள் எண்ணினர். ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இவர்கள் இருவரும் மீதும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.