இந்திய வீரர்கள் ஆதிக்கம்
இந்தியா, ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை முடித்துள்ள நிலையில் அடுத்து ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த நிலையில், நேற்று வெளியான ஒருநாள் போட்டி தரவரிசைகளில் இந்திய வீரர்கள் கோலி, ரோஹித், பும்ரா, குல்தீப் யாதவ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கோலி முதல் இடம்
பேட்டிங் தரவரிசையில் கோலி முதல் இடத்திலும், ரோஹித் இரண்டாம் இடத்திலும் தொடர்கின்றனர். ஷிகர் தவான் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் முதல் இருபது இடங்களுக்குள் இல்லை.
பும்ரா பந்துவீச்சில் முதல் இடம்
பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இரண்டாம் இடத்தில் ஆப்கனின் ரஷித் கான் இருக்கிறார். குல்தீப் மூன்றாவது இடத்திலும், சாஹல் ஆறாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
இந்தியா இரண்டாம் இடம்
இந்திய அணியை பொறுத்தவரை ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியா 121 புள்ளிகள் பெற்று இருக்கிறது. முதல் இடத்தில் இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் இருக்கிறது.
முதல் இடம் பிடிக்க வாய்ப்பு
இங்கிலாந்தில் வரும் மே மதம் முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன் இந்தியா முதல் இடத்தை பிடிக்க சிறிய அளவில் வாய்ப்பு உண்டு என தெரிய வந்துள்ளது.
எட்டு போட்டிகள்
இந்தியா அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளது. இந்த எட்டு போட்டிகளிலும் இந்தியா வென்றால் 125 புள்ளிகள் பெறும்.
இங்கிலாந்து தோல்வி அடைந்தால்..
ஒருநாள் தரவரிசையில் 126 புள்ளிகளில் இருக்கும் இங்கிலாந்து அணி அடுத்த மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரு போட்டியில் தோற்றால் கூட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை இழக்கும். சம அளவில் புள்ளிகளை பெற்றாலும் ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா முதல் இடத்துக்கு வந்து விடும்.