சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படும் முன் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக வர இருந்ததாகவும் அது பற்றி பிசிசிஐ விவிஎஸ் லக்ஷ்மனுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.
பிசிசிஐ அழைப்பு விடுத்தும் விவிஎஸ் லக்ஷ்மன் அதை மறுத்திருக்கிறார். அதனாலேயே இரண்டாவது தேர்வாக கௌதம் கம்பீரை பயிற்சியாளராக்க பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது.

அதற்கு முன்னதாக சில வெளிநாட்டு பயிற்சியாளர்களிடமும் பிசிசிஐ பேசி இருந்தது. அவர்களும் முழு நேரமாக இந்திய அணியின் பயிற்சியாளராக வர ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
அதனால் தான் கௌதம் கம்பீரை பிசிசிஐ அணுகியதாக தற்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை அறிந்த இந்திய ரசிகர்கள் விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் நிச்சயமாக இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை நான்கு போட்டிகளின் முடிவிலேயே கைப்பற்றி இருக்கும் என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
விவிஎஸ் லக்ஷ்மன் சர்வதேச போட்டிகளில் விளையாடிய காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிம்ம சொப்பனமாக இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்.
ஆஸ்திரேலியா வீரர்கள் எப்போதும் விவிஎஸ் லக்ஷ்மன் மீது சச்சினுக்கு இணையான மரியாதையை வைத்துள்ளனர். அவர் பேட்டிங் ஆட வந்தாலே ஆஸ்திரேலிய வீரர்கள் அழுத்தத்தை உணர்வார்கள் எனவும் பலமுறை கூறியுள்ளனர். இந்த நிலையில் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணியை பயிற்சியாளராகவும் அடக்கி இருப்பார் என ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றனர்.
எது எப்படியோ அடுத்து நடக்க உள்ள சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் இந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழக்காமல் இருக்க முடியும்